ரிக் இருடிகளுக்குப் பிறகு இவர்களின் சந்ததிகளும் வழியினரும் பிராமணங்கள், ஆரண்யங்கள், வேதாந்தங்கள் ஆகியவற்றைப் படைத்து, பிராமணியம் என்ற மதத்தை அல்லது மார்க்கத்தை அல்லது சமயத்தைக் கட்டமைக்கின்றனர். இவற்றின் முக்கிய ஆக்கங்கள் படைத்துவிட்டபொழுது, இவர்கள் முற்றிலுமாக மேய்த்தல் சமூகத்தின் வாழ்வியலை இழந்து, வேளாண் சமூகத்தின் வாழ்வியலுக்குப் புகுந்திருந்தனர். இன்னும் குறிப்பாக, உழுவித்துண்ணும் வேளாண் குடியினராக மாறியிருந்தனர். ரிக் இருடிகள் தாங்களே சமயத் தலைவர்களாகவும், படைத் தலைவர்களாகவும், கவிகளாகவும், பொருள் தேடுபவர்களாகவும் இருக்க, இவர்களோ, உழுவிப்பவர்களாகவும், குருமார்களாக குறிப்பாக பூசை மற்றும் சடங்களை நிகழ்த்துவோராக மட்டும் இருந்தனர். இந்நிலையில், இவர்களை சமயத் தலைவர்களாகக் கருதமுடியவில்லை. இவர்கள் ஒரு சமயத் தலைமையின் கீழ் இருந்து, ஒற்றைக் கொள்கையுடன் செயல்பட்டனர் என கூறமுடியாது உள்ளது என்பதையும்; இடமும், பொழுதும், பொருளாதாரமும் சார்ந்து இவர்கள் வேறுபட்டிருந்தனர் என்பதையும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். பிராமணியம் ஒற்றைச் சிந்தனையில் எவ்வாறு பிறக்கவில்லையோ அதுபோலவே ஒருபொழுதும் ஒற்றைத் தலைமையில் கீழ் இருந்ததில்லை. இதுபொழுது படைக்கலன்களை இவர்களை கைவிட்டு, அதனை முழுவதும் பிரம்மணரல்லாத சத்ரியர் வசம் ஒப்படைத்திருந்தனர். போலவே, உடலுழைப்பை சூத்திரர்களின் பிறப்புரிமை ஆக்கியிருந்தனர். வைசியர்கள் உற்பத்திப் பொருட்களை தேவைப்படும் இடத்துக்குக் கொண்டுசென்று விற்பவர்களாக மாறியிருந்தனர். சூத்திரர்களாகட்டும் வைசியர்களாகட்டும் அவர்கள் பிராமணரல்லாதோராகவே இருந்தனர் என்பது கருத்தியலே ஆனாலும், பிராமணச் சமூகத்தின் சமூக மாற்றத்தையும், அதன் வலிமையான கட்டமைப்பையும் காட்டவல்லதாக இருக்கிறது.