/

நிழல் தேடி: -ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கல்வி நிழல் தேடித்தானே
கன்னிய வான்களெல்லாம்
பம்பரமாய்ச் சுழன்று நித்தம்
பலநாடும் போயும் வந்தும்
நித்திரை யின்றிக் கூட
நிலவினையும் ரசிக்காமலேயே
உண்மையாய் உழைக்கின்றார்கள்
உறவினையும் உதறித் தள்ளி!

வாழ்க்கை நிழல் வதிந்தவர்கள்
வருமான நிழலைத் தேடி 
நாளெல்லாம் ஓடுகின்றார்
நரம்புகளும் முறுக்கேறிடவே
ஓடியாடி உழைக்கின்றார்
ஓய்வென்பதையே மறந்துவிட்டு
குடும்பத்தார் நலமொன்றையே
குறிக்கோளாய் வாழ்வில் கொண்டு!

சோம்பேறிக் கூட்ட மொன்று
சுரண்டலையே தொழிலாய்க் கொண்டு
ஏமாற்று வேலை செய்து
எடுத்த தெற்கெல்லாம் பொய் பேசி
அரசியல் நிழல் தேடி
அதனுள்ளே ஒளிந்து கொண்டு
நாட்டு நலனென்று சொல்லி
நாடுவார் தன் நலனொன்றையே!

காதல் நிழல் தேடி
கன்னியரும் காளையரும்
பெற்றோர் தமை மறந்து
பெருமைகளை ஒதுக்கி வைத்து
உலகமே காத லச்சில்
ஓடிச் சுழல்வதாய் எண்ணி
அதற்கெனவே அனைத்தை யுமே
அனாயாசமாய் இழக் கின்றார்!

அன்பு நிழல் தேடி
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
அமைதி வழியினிலே
அணுதினமும் தியானித்து
எல்லா உயிர்களையும்
தம்முயிராய் மிகமதித்து
வாழுகின்ற கூட்டத்தால்தானே
வாழ்க்கை இனி சிறக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.