சின்ன சின்ன ஆசை
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பúசùலன புல்ùவளிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், செடி, கொடிகளுடன் அடர்ந்த காடு.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென புல்வெளிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், செடி, கொடிகளுடன் அடர்ந்த காடு. திரும்பும் திசையெல்லாம் பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் தட்டுப்படும் விலங்குகள். வனப் பகுதிக்குள் செல்லும்போது காணும் இத்தகைய காட்சிகள் யார் மனதைத் தான் ஈர்க்காது.
பொதுவாக, வன உயிரினங்கள் மீதான ஆர்வத்தில் உலகம் முழுவதும் வனங்களைச் சுற்றி வருவோர் ஏராளமாக இருக்கின்றனர். மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர், தொழிலதிபர்கள் என வன உயிரின ஆர்வலர்களின் பட்டியலில் பலதரப்பட்டவர்களைக் கூற முடியும். இப்படி, சாதாரணமாக வெளிநாடு சுற்றுலா சென்ற மதுரையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சுபா பிரபாகர் இப்போது வன உயிரின ஆர்வலராகவும், வன உயிரின புகைப்படக் கலைஞராகவும் உருவாகியிருக்கிறார்.
இவர், மதுரையில் இயங்கி வரும் ஆயத்த ஆடை நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். நிறுவனத்தின் இயக்குநரான அவரது கணவர் பிரபாகர், நிதி மற்றும் விற்பனை சார்ந்த பணிகளைக் கவனிக்க, உற்பத்தி பணிகளை சுபா பிரபாகர் பார்த்துக் கொள்கிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆயத்த ஆடை நிறுவனத்தைக் கவனித்து வரும் நிலையில், வனஉயிரின சுற்றுலா ஆர்வம் பிறந்தது குறித்து சுபா பிரபாகர் நம்மிடம் கூறியது:
""கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவுக்கு சுற்றுலா சென்றபோது மசை மாரா வனச் சுற்றுலா பற்றி அறிந்து அங்கு சென்றோம். அப்போதுதான் ஏராளமான விலங்குகள் இயற்கைச் சூழலில் கூட்டம் கூட்டமாக இருந்ததை பார்க்கும் அனுபவம் கிடைத்தது. வனப் பகுதிக்குள் தங்கியிருந்தபோது, நூற்றுக்கணக்கான பறவைகள் எழுப்பிய ஓசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. காமிரா பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லையென்பதால் அந்த பசுமையான நினைவுகளை என்னால் படம் பிடிக்க முடியாமல் போனது. அடுத்தடுத்து 3 காமிராக்கள் வாங்கிவிட்டேன். அதற்கேற்ப ஒவ்வொன்றாக 10 லென்சுகள் வாங்கியிருக்கிறேன். அதன் பிறகு வன உயிரின சுற்றுலா, வன உயிரின போட்டோகிராஃபி குறித்த எனது தேடல், அதன்மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. வன உயிரின பூங்காக்கள் பற்றி இணையதளத்தில் படித்த பிறகு தான், இந்தியாவிலேயே ஏராளமான இடங்கள் அதைப் போல இருப்பதை அறிந்து கொண்டேன். அந்த இடங்களுக்கெல்லாம் சென்று ரசிப்பதுடன், அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரிடம் இணையவழியிலேயே வன உயிரின போட்டோஃகிராபி கற்றுக்கொண்டேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், ராமேசுவரம் ஆகிய இடங்களில் தான் முதன் முதலாக அரிய பறவைகளை புகைப்படங்கள் எடுக்கப் பழகினேன்.
தற்போது சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து செயல்படும் வன உயிரின சுற்றுலா குழுக்களில் இடம் பெற்றுள்ளேன். இக்குழுவினரின் வழிகாட்டுதலுடன் பல்வேறு வனப் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளேன்.
ஒவ்வொரு முறை சுற்றுலா செல்லும்போதும் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அசாம் காசிரங்கா வனஉயிரின சரணாலயத்துக்கு 3 முறை சென்றிருக்கிறேன். சிறப்புக்குரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், கழுகு உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பதிவு செய்தேன். "இந்தியன் கிரேன் கார்ன்பில்' எனப்படும் மரங்கொத்திப் பறவையை மட்டும் காண முடியவில்லை. மஞ்சள் நிறத்தில் நீண்ட அலகை உடைய இந்த பறவை வடகிழக்கு மாநிலங்களுக்குரிய சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் படங்கள் எடுத்தபோதும், அந்த மரங்கொத்தியைக் காண முடியாதது ஏமாற்றமாக இருந்தது.
மாலையில் இருப்பிடத்துக்குத் திரும்பி வந்தபோது, எதேச்சையாக ஒரு மரங்கொத்தியை காண முடிந்தது. காமிராவை எடுத்து படபடவென 100 படங்கள் எடுத்திருப்பேன். அலகை திருப்பி, உயர்த்திக் காட்டி, சிறகை விரித்து என அடுத்தடுத்து கொடுத்த காட்சி விவரிக்க முடியாதது. மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவையும் அளித்தது அன்றைய பயணம்.
புலிகள் அதிகம் காணக்கூடிய ராஜஸ்தான் ரந்தம்போர் தேசிய பூங்காவுக்கு ஒருமுறை சென்றோம். எங்களைப்போல சுற்றுலா வந்தவர்கள் ஏராளம். ஆனால் ஒரு புலியைக் கூட அங்கு காண முடியவில்லை. வீட்டிற்கு வந்ததில் இருந்தே புலியைப் பற்றிய விஷயங்கள் என்னைச் சுற்றி வந்தன. இதுபோதாது என்று எனது குடும்பத்தினர் புலி பற்றிய பல புத்தகங்களைக் கொடுத்தனர். ஒரு மாதம்வரை பார்க்க முடியாமல் போன அந்த புலிகள் நினைவாகவே இருந்தது.
ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்தது அசாமின் நமெரி தேசியப் பூங்காவுக்குச் சென்ற அனுபவம். அங்கு சென்ற பிறகு தான் இப்படியொரு வனப் பகுதி இருப்பதை இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்பது புரிந்தது. யானைகள், மான், சிறுத்தை என விலங்குகள் ஒவ்வொன்றாகப் பார்க்க பார்க்க த்ரில் ஆன அனுபவமாக இருந்தது. இந்த வனப் பகுதிக்குச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது விலங்கு முதுகில் பாய்ந்து தாக்கி விடுமோ என்று பதுங்கி பதுங்கி செல்வது வேறெங்கும் கிடைக்காத அனுபவமாக இருக்கும்.
ராஜஸ்தான் பரத்பூர் பறவைகள் சரணாலயம், எண்ணிலடங்கா புகைப்படங்களை எடுக்கும் அரிய வாய்ப்பைக் கொடுத்தது. இந்த சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள், பறவைகளை அன்பாகப் பார்த்துக் கொள்கின்றனர். இங்கு இருக்கும் சாரஸ் கிரேன் இன கொக்கு வகையைச் சேர்ந்த பறவை, குடும்பம் குடும்பாகத் தான் இருக்கும். அப்பா-அம்மா-குழந்தை என்பதைப் போல அவற்றின் குடும்பத்தைக் காண முடியும்.
இதேபோல, கேரளத்தில் உள்ள பெரியாறு வன உயிரின சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் வனப் பகுதிகள் என வன உயிரினச் சுற்றுலாவைத் தவறவிடுவதில்லை.
இந்தியாவில் வன உயிரின சுற்றுலாவில் காணவேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இந்த கரோனா பொதுமுடக்கம், வழக்கமான பயணத்தில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் பயணத்துக்கு தயாராகி வருகிறோம். அடுத்து எங்களது குழு கர்நாடக மாநில வனப் பகுதிக்குச் செல்ல இருக்கிறோம்'' என்கிறார் சுபா பிரபாகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...