அதர்வணத்துக்குப் பிறகு, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், சூத்திரங்கள் ஆகிய வேதநூல்கள் எழுகின்றன. இவை பிராம்மணத்தை முன்நிறுத்துபவையாக உள்ளன. பிற்கால பிராம்மண மதத்துக்கு ரிக்கின் தொடர்பும், பெயரும் ஏதோ ஒருவகையில் தேவை உருவாகியுள்ளது. அத்தேவையை ஒட்டித்தான், வேத நூல்களின் வரிசை ஒன்றின் பின் ஒன்று தொகுக்கப்பட்டனவா அல்லது, பிராம்மணியத்துக்கு முன்னர் தொகுக்கப்பெற்ற பண்டைய நூல்களில், பின்னர் பிராம்மணியம் ஒரு மரபுத் தொடரைக் காட்ட, ரிக்கில் பிற்சேர்க்கைகளையும் கிலங்களையும் உருவாக்கி, அதன் தொடர்ச்சி சாம, யசூர், அதர்வணத்தில், அதன் தொடர்ச்சி பிராமணங்களில், அதன் தொடர்ச்சி ஆரண்யங்களில், அதன் தொடர்ச்சி உபநிடதங்களில் என அமைத்து அல்லது பின்னதிலிருந்து முன்னதுக்கு என பிராம்மணியம் வளரவும் வளர்க்கவும், புகுத்தவும் செய்யப்பட்டனவா என ஆய்வுகள் விரிய வேண்டும். பின்னதில் இருந்து முன்னதுக்கு எனக் கருத பயன்பாட்டு மொழி நமக்கு உதவும்.