செம்மைப்படுத்திய பாணினி, செம்மை மொழி இந்நிலை அடைவது குறித்து யோசித்திருக்கமாட்டார். அவர், மக்கள் வழக்கில் செல்வாக்குடன் இருந்த பிராகிருத மொழிகளின் வளர்ச்சி கண்டே, (பிராகிருத மொழிகள் வளர்ச்சி என்ன என்பது குறித்து வரும் யுத்தபூமி அதியாயங்களில் காணலாம்) வேத மொழியை அதன் ஆதிப் பொருளில் மீட்கும் முயற்சியாகவே அஷ்டாத்தியாயியை படைத்தார் என்பதை வரலாற்றுப்போக்கின் நிகழ்வுகளில் இருந்து தெளியமுடிகிறது. ஆனால் விளைவு, அஷ்டாத்தியாயி வகுத்தளித்த செம்மை சம்ஸ்கிருதம், மக்கள் மொழியாக மாறாமல், சமய இலக்கியங்களை ஓதும், அந்தணர்கள், பிராமணர்கள், படித்தவர்கள் மொழியாக மட்டும், கிட்டத்தட்ட பழைய வேத மொழியின் நிலைக்கே ஆனது. இதனால், அந்தணர்கள், பிராமணர்கள், படித்தவர்கள் செம்மை சம்ஸ்கிருதத்தை அறிந்திருந்தாலும், பேச்சு வழக்கு மொழியில் வேவ்வேறு மொழிகளைக் கைக்கொண்டனர். அதுவே காலப்போக்கில் அவர்களின் தாய்மொழியாகவும் ஆனது. பிராமணியத்தைத் தழுவியர்கள் மொழியும் அவரவர் தாய்மொழியே விளங்குகிறது போன்ற இந்நிலை, விளக்கம் பெறாமல் போகிறது.