வேதக் கடவுளுக்கு, குறிப்பாக ரிக் வேதம் கொண்டாடும் கடவுள்களுக்கு உருவங்கள் வழங்கப்படாதிருந்த காலம் ஒன்று இருந்தது. ரிக் வேதம் போற்றாத கடவுள் வணக்கம், பிற்காலத்தில் “பிராமணியக் கடவுள்”களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராமணிய முறை வழிபாட்டுக்கு உள்ளான காலம் எது என்பது குறித்து, இன்றைய நிலையில் அறுதியிட்டுக் கூறமுடியாது எனினும், ஜைனம், பெளத்தம் மரபில் இருந்து மீட்டுக்கொண்ட மூத்தோர் வழிபாட்டுக்கு மக்களிடையே கிடைத்திருந்த மிகுந்த செல்வாக்கின் காரணமாக, நாட்டுப்புற வழக்காறுகளில் பல்வேறு வடிவங்களில், பல்வேறு பிரதேச மணம் கொண்டிருந்த வீரக் கதைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு, இந்தியாவின் இரு இதிகாசங்களாகவும், பதினெண் புரணங்களாகவும் உருக்கொண்டன. இதிகாசங்களின் நாயகர்களும், புராணங்களின் நாயக நாயகிகளும், மூத்தோர் நிலையில் இருந்து பிராமணியக் கடவுள்களாக உருக்கொண்டனர். ரிக் கடவுளர்களுக்கும், இதிகாசக் கடவுளர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதனை, மூல நூல்களின் மூலங்களின் ஒப்பாய்வுகளில் இருந்து தெளியலாம்.