பாறைகளில் தாழ்வறைகளை உருவாக்க, முதலில் சதுரமான குழி மேலிருந்து ஆழமாகத் தோண்டப்படும். இக்குழியில் கீழே இறங்குவதற்குப் படிக்கட்டுகளும் ஒருபுறத்தில் அமைக்கப்படும். அடுத்ததாக, இந்தக் குழியின் அடிமட்டத்துக்குச் சற்று மேலாக, குழியின் ஏதாவது ஒரு பக்கத்தில், ஒரு ஆள் படுக்கைவசமாக நுழைவதற்குத் தக்கவாறு குடைந்து, அதனுள் சென்று மேலும் ஒரு அறை குடையப்படும். இந்த அறையின் தரை, முதலில் தோண்டப்பட்ட சதுரக்குழியின் தரைக்கும் சற்று கீழாக இருக்கும்படி அமைக்கப்படும். இவ்வறையின் மேல்பகுதியான கூரை, குவிந்த முகட்டை உடையதாகக் குடையப்படும். மேலும், இந்தக் குவிந்த முகட்டின் நடுப்பகுதியைத் தாங்கும் வகையில், அறையின் தரையில் இருந்து ஒரு கல்தூண் நிற்குமாறு குடையப்படும். இந்த முகட்டின் உச்சியில், வானத்தை நோக்கி ஒரு துளை குடையப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இத்துளை பெரும்பாலும், முகட்டைத் தாங்கும் தூண் குடையப்படாத குடைவரைகளில் காணமுடிவதாகக் கருத்து உள்ளது. இத்துளை குடையப்பட்டதன் நோக்கம் இன்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. இத்துளை கல்திட்டை, கல்பதுக்கைகளில் இடம்பெறும் இடுதுளையின் நோக்கத்தை போன்றது என உறுதிசெய்யமுடியாது. ஏனெனில் பாறையின் மேலே, துளையின் மேல்திறப்பை ஒரு மூடுகல்லால் மூடியுள்ளதையும் காணமுடிகிறது. இந்த மூடுகல், குடைக்கல் வடிவில் இருப்பதும் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. துளைகள் இடம்பெறாத குடைவறைகளும் வட்டமான மூடுகல் கொண்டவற்றையும் காணமுடிகிறது.