இந்தக் கல்திட்டை ஓவியத்தொகுப்பில் விலங்கு மீது அமர்ந்த இரு மனித வடிவங்களும், குத்துக்கோடும், அதன் குறுக்கே புள்ளிகளால் ஆன குறுக்குக் கோடுகள் கொண்ட குறியீடு ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இக்குறியீடு, கல்திட்டை 7-ல் இடம்பெற்ற குறியீட்டை நினைவுபடுத்துவதுபோல இருப்பினும், சிற்சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. குறிப்பாக, இதில் கிளை பிரியும் உச்சியாகக் காட்டப்படவில்லை; புள்ளிகளால் ஆன குறுக்குக் கோடுகளில் முழுமையைக் காணமுடியவில்லை. விலங்கு மீது அமர்ந்த இரு மனித வடிவங்களும் குத்துக்கோடும் குறுக்குக்கோடும் இடம்பெற்ற குறியீட்டுக்கு இருபுறமும், நேருக்கு நேர் பார்ப்பதுபோலும் தீட்டப்பட்டுள்ளன. இம்மனித வடிவங்கள் இரண்டின் தலைப்பகுதியில் அரைவட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வகையான சித்தரிப்பை மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியங்களிலும் காணப்படுவது குறித்து முன்னர் விளக்கப்பட்டுள்ளது. (காண்க, அத்தியாயம் 34).