தமிழகத்தைப் பொருத்தஅளவில், இவ்வோவியங்களைப் பழைய கற்காலப் பண்பாடு வெளிப்பட்டுள்ள பாலாறு, தென் பெண்ணை ஆற்றுப்படுகை நிலங்கள் அதிகமாகக் காணமுடிகிறது. அதாவது, வடதமிழகத்தின் மாவட்டங்களான இன்றைய அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இவை அடர்த்தியாக வெளிப்பட்டுள்ளன. நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமான தொல்லோவியங்கள் அறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குறைவான இடங்களில் தொல்லோவியங்களை வெளிப்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையில் ஓவியங்களை வெளிப்படுத்தியுள்ளது. கருக்கியூர், தென்னிந்தியாவில் அளவிலும், ஓவியங்களின் எண்ணிக்கையிலும் வெளிப்படுத்தப்பட்ட இடமாகும். இருந்தாலும், பழைய கற்காலத்துக்குரிய தொல்லோவியம் ஏதும் இப்பகுதியில் இருந்து வெளிப்படாமல் உள்ளது.