கல்திட்டைகளில் காணப்படும் ஓவியங்கள், பாறை ஓவியங்களில் இருந்து கருத்துப் பரிமாற்றத்தில் நுட்பமான வேறுபாட்டுடன் வெளிப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் குகைகளில் இருந்தாலும் வெளிப்புறத்தில் இருந்தாலும், அவை அவ்வக்கால வாழ்வின் நிகழ்வுகளை, கட்புலனான காட்சிகளை, நம்பிக்கைகளை, அடியோட்டமான சிந்தனைகளை, அழுத்தமான சிந்தனைகளை, திடீர் உணர்சிகளை, புலனுறுப்புகளால் உணர்ந்தவற்றை, ஆட்டத்தை, கேளிக்கையை, கொண்டாட்டத்தை, விளையாட்டை, முன்னோர்களின் நினைவுகளை, தனியனின் வீரத்தை, குழுவின் வீரத்தை என பலவற்றையும் காட்சிப்படுத்த முனைகின்றன. இக்குணங்கள் கொண்டே, இவ்வோவியங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதால் இவை வாழ்விட ஓவியங்கள் என்றும் அழைக்கப்படலாயின.