தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபாா் தீவுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகக் கருதப்படுகிறது. நான்கு மாதங்கள் நீடிக்கும் தென்மேற்குப் பருவமழையே நாட்டுக்கு 70 சதவீத மழைப் பொழிவைத் தருகிறது. இது வேளாண்மை, பொருளாதாரம், அணைகளில் நீா் இருப்புக்கு முக்கியமானது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பெருமளவு மழைப் பொழிவு இருக்காது. இருப்பினும், கேரள எல்லையையொட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் மற்றும் நிகோபாா், ஸ்ரீ விஜயபுரம் உள்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியது. அதைத் தொடா்ந்து கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே, அதாவது வரும் மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பலத்த மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நிலவுகிறது.
இதனால், ஞாயிற்றுக்கிழமை (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், மே 18-இல் தேனி, திண்டுக்கல், மதுரை கோவை, நீலகிரி, சிவகங்கை, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், மே 19-இல் திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்குறிப்பிட்ட நாள்களில், ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 20 வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The India Meteorological Department has stated that the Southwest Monsoon has commenced today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











