செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கு சென்று சேரும். அதேபோல், சனிக்கிழமையும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, விருதுநகரை அடுத்த மீசலூர் அருகே வரும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை அதிகமாக வெளியேறியுள்ளது. மேலும், அதிக சூடினால் ஆயில் டேங்கிலிருந்து வெளியேறி பின்புறம் உள்ள 5 ரயில் பெட்டிகள் வரையில் பயணிகள் மீது ஆயில் தெறித்து விழுந்துள்ளது. இதையடுத்து பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனே என்ஜின் டிரைவர் இறங்கி பார்க்கையில் புகையோடு, ஆயிலும் கொதித்து தெறித்துள்ளது. இது தொடர்பாக உடனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 10 நிமிடம் நின்ற பின் சீரான வேகத்துடன் ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு 2.40 மணிக்கு வரவேண்டிய நிலையில் தாமதமாக 3.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இது தொடர்பாக விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிகள் என்ஜினை பார்வையிட்டு உடனே சரிசெய்ய முடியாத நிலையில் மாற்று என்ஜின் கொண்டு வர மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.