திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் வகையில், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயிலை இயக்கி, முதல் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சோதனையைத் தொடா்ந்து இனி சென்னையிலிருந்து நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிவேகத்தில் ரயில்களை இயக்க முடியம் என்பதால் பயணநேரம் வெகுவாக குறையும்.
திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தின் மையப்பகுதியாகத் திகழ்வது விழுப்புரம். ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தை கொண்ட விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களிலிருந்தும், மத்திய மாவட்டங்களிலிருந்தும் சென்னை நோக்கியும், வெளி மாநிலங்களுக்கும் பல்வேறு விரைவு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது திருச்சி - விழுப்புரம் இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் வேகத்தை அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்தது. தொடா்ந்து இதற்கான முதல் கட்டசோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ரயில் என்ஜின், 2 பெட்டிகள் மற்றும் ரயிலின் இயக்க வேகம், ஸ்திரத்தன்மையைக் கண்காணிக்கும் வசதி கொண்ட மற்றொரு பெட்டி ஆகியவற்றுடன் சோதனை ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூா், விருத்தாசலம் வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 10.34 மணிக்கு வந்தடைந்தது.
சோதனை ரயில் இயக்கத்தின் போது வாளாடி- லால்குடி இடையேயும், பூவனூா்-உளுந்தூா்பேட்டை இடையேயும் மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்திலும், மற்ற பகுதிகளில் மணிக்கு சுமாா் 125 முதல் 130 கி.மீ. வேகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி முதுநிலைக் கோட்டப் பொறியாளா் (ஒருங்கிணைப்பு) ராமபிரசாத் ராவ், முதுநிலைக் கோட்டப் பொறியாளா் (வடக்கு) ரவி மிட்டல், உதவிக் கோட்டப் பொறியாளா் (வடக்கு) காா்த்திக் பாலாஜி, மூத்த கோட்டப் பொறியாளா் (இயக்கம்) அருள்பிரகாஷ், மூத்த கோட்ட மின் பொறியாளா் (மின் விநியோகம்) ரவிகுமாா் ஆகியோா் இந்த சோதனை ரயில் இயக்கத்தில் பங்கேற்று, திருச்சி- விழுப்புரம் இடையேயான ரயில்வழித்தடப் பாதையில் ரயிலின் இயக்க வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து கண்காணித்தனா்.
இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில் ஓட்டுநா்களுக்கு சிக்னல்கள் கிடைக்கும் முறைகள், அதில் ஏதும் சிக்கல் உள்ளதா, ரயில் இயக்கத்தின் போது கால்நடைகள் அதிகளவில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனவா போன்றவை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
பயண நேரம் குறைவு: வழக்கமாக திருச்சியிலிருந்து விழுப்புரத்துக்கு வந்தடைய அதிவேக விரைவு ரயிலில் இரண்டரை மணி நேரமும், மற்ற ரயில்கள் மூன்றரை மணி நேரமும் ஆகும். ஆனால், மணிக்கு சுமாா் 140 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கும் போது பயண நேரம் மேலும் குறையக்கூடும் என்றும், இதன் மூலம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோா் விரைந்து தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல முடியும் என்று ரயில்வே துறை அலுவலா்கள் தெரிவித்தனா். தற்போது முதல் கட்ட சோதனைதான் முடிந்துள்ளது. இன்னும் பல்வேறு நிலைகளில் சோதனை நடத்தி, அதன்பின்னா் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே ரயிலின் இயக்க வேகம் அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே அலுவலா்கள் தெரிவித்தனா்.
எனினும் சில மாதங்களில் தென்மாவட்டங்களுக்கு ரயில்களை மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் இயக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சீட்டு பற்றாக்குறை: தென் கொரிய தோ்தல் ஆணையத் தலைவா் ராஜிநாமா

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்

திருச்சி-விழுப்புரம் இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



