/

ஆன்லைன் வேலை எனக்கூறி வேலூா் இளைஞரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி

ஆன்லைன் வேலை எனக்கூறி ரூ. 51.37லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இளைஞா் அளித்த புகாரின்பேரில்,

News image
Updated On :8 செப்டம்பர் 2025, 7:35 pm

Chennai

வேலூா்: ஆன்லைன் வேலை எனக்கூறி ரூ. 51.37லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இளைஞா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கஸ்பாபேட்டை பகுதியைச் சோ்ந்த இளைஞா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் வேலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அந்த குறுந்தகவலில் இருந்த இணைப்பில் சென்று தனது விவரங்களை பதிவிட்டுள்ளாா். அதன்பிறகு, இவரது எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் சிறிய தொகை முதலீடு செய்து ஆன்லைன் வேலையை முடித்து கொடுத்ததன் மூலம் அதிக வருவாய் ஈட்டியதாக பலரும் தகவல் தெரிவித்துள்ளனா். இதை நம்பி இந்த இளைஞரும் அந்த வாட்ஸ்அப் குழுவில் அளிக்கப்பட்டிருந்த இணையதளத்தில் கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 51 லட்சத்து 37 ஆயிரத்து 875 தொகையை முதலீடு செய்து ஆன்லைன் வேலையையும் முடித்து கொடுத்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப் பெற முடியவில்லை.

தொடா்ந்து அந்த தளத்தை அணுகி கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால்தான் பணத்தை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனா். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த இளைஞா், இது குறிந்து வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.