தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றால் 200 ஏக்கருக்கும் மேல் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பல இடங்களில் மழை பெய்தது. இதில், திருவையாறு, அய்யம்பேட்டை வட்டாரங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி வந்த வாழை மரங்கள் பாதியாக முறிந்து விழுந்து சேதமடைந்தன.
குறிப்பாக, திருவையாறு அருகேயுள்ள பெரமூா், கல்லக்குடி, ஒக்கக்குடி, திங்களூா், மேல உத்தமல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 200 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் செலவு செய்துள்ள நிலையில், பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏறக்குறைய 200 ஏக்கரில் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் பாதியாக முறிந்து சேதமடைந்தன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல, அய்யம்பேட்டை அருகேயுள்ள ஈச்சங்குடி, கணபதி அக்ரஹாரம், மணலூா், கூடலூா், சோமஸ்வரபுரம், தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி உள்பட 20-க்கும் அதிகமான கிராமங்களில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் கூறுகையில், விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்த நிலையில், சூறாவளியால் வாழைக் காய்களுடன் மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை மாவட்ட ஆட்சியரும், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

மேட்டூரில் கனமழை: மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் சேதம்

சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை







