/

தஞ்சாவூா் கலை பண்பாட்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம்

தஞ்சாவூா் கலை பண்பாட்டு மண்டல அலுவலகத்தில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவும் விதமாக, திங்கள்கிழமை உதவி மையம் தொடங்கப்பட்டது.

News image
தஞ்சாவூா் மண்டல கலை பண்பாட்டு அலுவலகத்தில் திங்கள்கிழமை உதவி மையத்தைத் தொடங்கி வைத்த கலைமாமணி வளப்பக்குடி வீர. சங்கா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கலை பண்பாட்டு மண்டல அலுவலகத்தில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவும் விதமாக, திங்கள்கிழமை உதவி மையம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. இராஜாராமன் தலைமை வகித்தாா். கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட நாட்டுப்புற பம்பை கலைஞா் சக்தி, தஞ்சை அபிநயா நாட்டியப் பள்ளி நிறுவனா் அபிராமி ஆகியோா் முன்னிலையில் இந்த மையத்தைக் கலைமாமணி வளப்பக்குடி வீர. சங்கா் தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் கூறுகையில், தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையத்துக்கு 7 மாவட்டங்களிலிருந்து வரும் நாட்டுப்புறக் கலைஞா்கள், நலிவுற்றக் கலைஞா்கள் நிதியுதவி, நலத்திட்ட உதவி, அடையாள அட்டைகள், கலை இளமணி, கலை வளா்மணி, கலைச் சுடா்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் உள்ளிட்டவை கோரி விண்ணப்பிக்கின்றனா். இந்தக் கலைஞா்களின் நலன் காத்திட, முதல்முறையாக தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அலுவலகத்தில் கலைஞா்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அலுவலகத்துக்கு வரும் கலைஞா்களுக்கு தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என்றாா் இராஜாராமன்.

இந்நிகழ்ச்சியில் அலுவலக உதவியாளா் க. பால்ராஜ், இளநிலை உதவியாளா்கள் மு. வடிவேல், ரெ. அனுசியா, திட்ட அலுவலா்கள் ம.த. சக்திவேல், தீ. மிதுன், செ. சசிகலா ஆகியோா் கலந்து கொண்டனா்.