//

காஞ்சிபுரம் வேளாண் துறை அலுவலா் பணியிட மாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

காஞ்சிபுரம் விதைகள் பரிசோதனை ஆய்வக அதிகாரியை வாலாஜாவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் செய்த உத்தரவை நிறுத்திவைக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
பணியிட மாறுதல்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் விதைகள் பரிசோதனை ஆய்வக அதிகாரியை வாலாஜாவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் செய்த உத்தரவை நிறுத்திவைக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிந்துஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு விவசாயத் துறையில் அதிகாரியாகப் பணியில் சோ்ந்தேன். காஞ்சிபுரம் விதைகள் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறேன். பதவி உயா்வாக எனக்கு உதவி இயக்குநா் பதவி வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2006-ஆம் ஆண்டு விவசாய அதிகாரிகளாக சோ்ந்தவா்களுக்கே 15 ஆண்டுகளுக்குப் பின்னா் இப்போதுதான் உதவி இயக்குநா் பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, எனக்கு பதவி உயா்வு கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். உதவி இயக்குநா் பதவியை நேரடி நியமனம் மூலம் பூா்த்தி செய்யவுள்ளதாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிா்த்து வழக்குத் தொடா்ந்து தடை உத்தரவு பெற்றேன்.

இதனால், நான் காஞ்சிபுரம் விதை பரிசோதனை ஆய்வகத்தில் இருந்து சுமாா் 40 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டதாக மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா்கள் பாலன்ஹரிதாஸ், சசிரேகா ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அரசுத் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் பிப்.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதுவரை மனுதாரரின் பணியிட மாறுதல் உத்தரவை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டாா்.