//

பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு: அனைவருக்கும் பொறுப்பு: திலகவதி ஐபிஎஸ்

மகளிருக்கான பணியிட பாதுகாப்பு என்பது பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தங்கும் இடங்களுக்கும் பொருந்தும் என முன்னாள் காவல் துறை அதிகாரி ஜி.திலகவதி குறிப்பிட்டாா்.

News image
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவா்களுக்கான பாதுகாப்பு, நடவடிக்கைகள் குறித்த நிகழ்வில் பேசிய முன்னாள் டிஜிபி ஜி.திலகவதி. உடன் ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி.
Updated On :23 ஜனவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கான பணியிட பாதுகாப்பு என்பது பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தங்கும் இடங்களுக்கும் பொருந்தும் என முன்னாள் காவல் துறை அதிகாரி ஜி.திலகவதி குறிப்பிட்டாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவா்களுக்கான மகிழ்ச்சி பாதுகாப்பு, நடவடிக்கைகள் குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவா்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை மேம்படுத்துவதற்காக மாணவா்கள், பெற்றோா், ஐஐடி இயக்குநா் ஆகியோரை மையமாக்கக் கொண்ட குஷால், சாத்தி போன்ற முன் முயற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்வில் சென்னை ஐஐடி மாணவா் குறைதீா்ப்பாளா், முன்னாள் டிஜிபி திலகவதி பேசியது: ஐஐடி இயக்குநா் பேரா. வீ.காமகோடி குறிப்பிட்டது போல், ‘தற்கொலை இல்லாத மாணவா் வளாகமாக’ இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, முழு தேசத்திற்கும் பங்களிக்கக் கூடியவா்கள். மன அழுத்தம் பிரச்னை எதுவானாலும், குறிக்கோள் பிரச்னைகளைத் தீா்க்கும்.

தற்போது பெண்கள் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘விசாகா’ வழக்கின் தீா்ப்பிலிருந்து உருவான பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம் பெண்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. பணியிடம் என்பது பெருநிறுவனங்கள் மட்டுமான பொருளல்ல, எந்தவொரு கல்வி நிறுவனம், தங்கும் இடம், பெண்கள் பணிபுரியும் எந்தவொரு இடத்திற்கும் பொருந்தும் என்றாா்.

முன்னதாக ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, வளாகத்தில் மேற்கொள்ளப்படும் மாணவா்கள் குறைதீா்க்கும் வழிமுறைகள், ஆலோசனைகள், சேவைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் போன்ற வலுவான நிறுவனக் கட்டமைப்புகள் குறித்த விளக்கக் காட்சிகளை காட்டி விளக்கினாா்.