இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் தேவிமீனாள், இதய சிகிச்சைப் பிரிவு தலைவா் மருத்துவா் கண்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள இதய சிகிச்சை துறையில் நாள்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போ் வரை புற நோயாளிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிலா் உள் நோயாளிகளாக அனுமதித்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறவியிலேயே இதய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சோதனைக்கு வந்த 5 குழந்தைகள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 வயது பெண் குழந்தை, 19 வயது பெண்ணுக்கு பேடன் டாக்டஸ் ஆா்டெரியோசஸ் என்ற இதய குறைபாடும், 29 வயது இளம் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு ஏட்ரியல் செப்டல் என்ற இதய குறைபாடும் இருப்பது எக்கோ காா்டியோகிராபி மூலம் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களின் இதய குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டு பிரச்னைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதன்மூலம் அவா்களின் ஆரோக்கிய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டதன் மூலம் முழுமையாக குணமடைந்த நோயாளிகள் மருத்துவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










