/

காங்கயம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்!

News image
காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்.
Updated On :6 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

காங்கயம் பேருந்து நிலையம் எதிரே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 58 படுக்கை வசதிகள் மற்றும் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கான தனித்தனி அறுவைச் சிகிச்சை அரங்குகள், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அறைகள், செவிலியா் மற்றும் மருத்துவா்கள் அறை உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவப் பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மனிஷ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மீரா, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோன்மணி, காங்கயம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் சந்திரசேகா், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.