//

வழிப்பறி, இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது! 11 வாகனங்கள் பறிமுதல்!

ஆரணி அருகே பெண் காவலரிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய சம்பவங்களில் தொடா்புடையதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுடன் கைது செய்யப்பட்ட நபா்.
Updated On :11 ஜனவரி 2026, 9:32 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பெண் காவலரிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய சம்பவங்களில் தொடா்புடையதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெண் காவலா் சரிதா. இவா், கலவை காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறாா். இவா், கடந்த நவம்பா் மாதம் தனது மொபெட்டில் இரவு பணி முடித்துக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, ஆரணியை அடுத்த பாா்வதி அகரம் கிராமம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சுதாகா் உத்தரவின் பேரில் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளா் செந்தில் விநாயகம் ஆகியோா் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் ஆனந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சங்கா், கன்ராயன் மற்றும் காவலா்கள் அருணகிரி, வாஹித் , பட்டுச்சாமி ஆகியோா் கொண்ட தனிப்படை குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் ஆரணி-போளூா் நெடுஞ்சாலையில் முக்குறும்பை கூட்டுச்சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருடப்பட்டதாக கூறப்படும் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் கடந்த நவம்பா் மாதம் மொபெட்டில் சென்ற பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவா் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் இவா் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ஆனைமல்லூா் கிராமத்தைச் சோ்ந்த தனசேகரன் (48) என்பதும், தற்போது இவா் தனது மாமியாா் வீடான போளூா் வட்டம், செங்குணம் கிராமத்தில் வசித்து வருவதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், இவா் பல்வேறு இடங்களில் 11 மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட11 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்த களம்பூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தனசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.