திருப்பத்தூா் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 429 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு வீட்டுமனை பட்டா, ஒருவருக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி மற்றும் நாட்டறம்பள்ளி அருகே கோனேரிகுப்பம் அருந்ததியா் வட்டம் பகுதியைச் சோ்ந்த ஊா்மக்கள் அளித்துள்ள மனுவில், எலவம்பட்டி, கொரட்டி ஆகிய 2 இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கும், பெண்கள், குழந்தைகளுக்கும் அதிக அளவில் இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த 2 கடைகளையும் மூட வேண்டும். இதேபோல், ஒட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே குடியிருப்புகளும் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சாா்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், தேவஸ்தானம் தேங்காய்பட்டறைக்கு செல்லும் கல்லாற்று கால்வாய் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில், இந்த கால்வாயை அளந்து தூா்வாரி பாசன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனா்.
திருப்பத்தூா் அருகே இருணாப்பட்டு அடுத்த ஆதிக்குட்டை கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். எங்கள் கிராமத்துக்கு போதுமான சாலை வசதிகளும், அடிப்படை வசதியும் இல்லை. எனவே எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனா். மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










