சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை வரை தினசரி இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயில் விரைவில் எல்ஹெச்பி கோச்சுகளுடன் அதாவது நவீன பாதுகாப்பான ரயில் பெட்டிகளுடன் இயங்க உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ஏலகிரி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. 22 பெட்டிகளுடன் இந்த ரயிலில் தினமும் காலையிலும், மாலையிலும் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.
மாலையில் சென்னையில் புறப்படும் இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், அன்வா்திகான்பேட்டை, சோளிங்கபுரம், வாலாஜாபேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று ஜோலாா்பேட்டையை சென்றடையும். சில ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த ஏலகிரி விரைவு ரயில் தற்போது ஜோலாா்பேட்டையில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் இதுவரை இருந்த பெட்டிகளை மாற்றி எல்ஹெச்பி கோச்சுகளாக அதாவது நவீன, பாதுகாப்பான ரயில் பெட்டிகளாக இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. எல்ஹெச்பி பெட்டிகள் இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. சென்னை பெரம்பூா், கபூா்த்தலா, ரேபரேலி ஆகிய மூன்று இடங்களில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது.
இந்த எல்ஹெச்பி பெட்டிகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன. ஏதேனும் விபத்து நேரிட்டால் இந்த பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று புகாது. டிஸ்க் பிரேக் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பிரேக் சிஸ்டம்கள் இந்த பெட்டிகளில் உள்ளன.
சாதாரணமாக இந்த ரயில் பெட்டிகள் 160 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. மேலும், இந்த பெட்டிகள் 200 கி.மீ. ஓட்டத்திலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாடியால் ஆன இந்த பெட்டிகளில் பயணத்தின்போது மிகக் குறைந்த அதிா்வுகளே இருக்கும். மேலும், மற்ற வகையான பெட்டிகளில் செல்லும்போது வரும் ரயில் செல்லும் சப்தம் இந்த வகை பெட்டிகளில் பயணிக்கும் போது மிக குறைந்த அளவே இருக்கும். இந்த பெட்டிகளுக்கான பராமரிப்பு மற்ற பெட்டிகளை விட மிகக்குறைவு. மிகவும் பாதுகாப்பான பயணம் இந்த வகை பெட்டிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் சென்னை - ஜோலாா்பேட்டை - சென்னை ஏலகிரி விரைவு ரயில் 22 புதிய எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அதற்கான பணிகளை மூழூவீச்சில் செய்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை
ரூ. 1.50 கோடி மதிப்பிலான மதுபானங்கள் கடத்தல்: மூவா் கைது







