திருவருள் வழங்கும் திருப்போரூர்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் புகழ்பெற்று விளங்கும் தலம் திருப்போரூர். முருகப்பெருமான் அசுரர்களின் ஆணவத்தை அழிக்க கடலிலே போர் புரிந்த தலம் திருச்செந்தூர்.


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் புகழ்பெற்று விளங்கும் தலம் திருப்போரூர். முருகப்பெருமான் அசுரர்களின் ஆணவத்தை அழிக்க கடலிலே போர் புரிந்த தலம் திருச்செந்தூர். நிலத்திலே போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம். விண்ணிலே போர் புரிந்த தலம் திருப்போரூர். எனவே தான் இவ்வூர் யுத்தபுரி, சமரபுரி, போரியூர், செருவூர், போரிமா நகர், சமரபதி எனப்பல பெயர்களால் போற்றி அழைக்கப்படுகின்றது.
திருப்போரூர் திருக்கோயில் மிகத் தொன்மையானதாக பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்ததாக விளங்கினாலும் 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் என்ற அருளாளர் இக்கோயிலைக் கட்டினார்.
மதுரை மீனாட்சி அம்பிகை கனவில் அருளி காட்டிய வழிபடி இவ்விடத்தை தேடி அலைந்த போது சிதம்பரம் சுவாமிகள் முன்பு பனங்காடாக இருந்த இவ்விடத்தில், ஒரு பெண் பனைமரத்தடியில், முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அவருக்கு காட்சியளித்தார். அவ்விடத்திலேயே முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. எனவே கருவறையில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாகும். மூல மூர்த்திக்குப் புனுகுச் சட்டம் சார்த்தி கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கின்றனர். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் அட்ச மாலை, கமண்டலம், அபய வரத முத்திரை கரங்களுடன் ஞான மூர்த்தியாக காட்சி தருகிறார்.
இம்மூர்த்தியும் சிதம்பர சுவாமிகளால் அபிஷேக வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டதாகும். சிதம்பர சுவாமிகளைத் தொடர்ந்து பின்னர் வந்த அருளாளர்களும் இக்கோயிலைத் தொடர்ந்து போற்றி திருப்பணிகள் செய்து வந்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் முன்பு, தெற்கு பகுதியில் என்றும் வற்றாத திருக்குளம் அமைந்துள்ளது "சரவணப் பொய்கை' என்றும், "வள்ளையார் ஓடை' என்றும் இது அழைக்கப்படுகிறது. கோயில் நுழைவு வாயிலின் அருகே பலி பீடம், கொடி மரம், மயில் வாகனம் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் கணபதி, பிரம்ம சாஸ்தா, அகஸ்தியர், வீரபத்திரர், வீரபாகு சந்நிதிகளும் அமைந்துள்ளன.
யந்திர ஸ்தாபனம்: இக்கோயிலில் ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள "யந்திர ஸ்தாபனம்' எனப்படும் சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேகமும், யந்திரமாலா பூஜையும் செய்யப்படுகின்றன. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறி அன்பர்கள் நலமடைகின்றனர். குறிப்பாக திருமணம், பிள்ளைப் பேறு வேண்டி வழிபடுகின்றனர்.
வெளித்திருச்சுற்றில் உள்ள சர்வவாத்ய மண்டபம் சிற்பக் கருவூலமாக அமைந்துள்ளது. முருகனின் பல்வேறு வடிவங்களை குறிப்பாக அகத்தியருக்கு அருள்புரியும் ஞானஸ்கந்தன், ஆட்டு வாகனத்தில் எழுந்தருளியுள்ள அஜாரூடர் ஆகியவை சிறப்பான வடிவங்களாகும்.
இக்கோயிலில் நவகிரக வழிபாடு இல்லை. சூரியன் மேற்கு பார்த்தும், சனீஸ்வரன் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியாக அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்புதான்.
வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் சந்நிதியும், வான்மீகேசுவரர், புண்ணிய காருண்ய அம்மன் சந்நிதியும் அதன் அருகில் தல விருட்சமான வன்னிமரமும், பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளது.
இக்கோயிலில் வழிபாட்டில் இருக்கும் இரண்டு அரிய உற்சவ திருமேனிகளை, பிரணவ மந்திரத்திற்குப் பொருளை சிவபெருமானுக்கு முருகன் உபதேசிக்கும் உற்சவ மூர்த்தி வடிவமும், அசுரர்களை எதிர்த்து போர் செய்ய முருகன் முன் கரத்தில் வில்லும், அம்பும் வைத்திருக்கும் பாவனையில் கம்பீரமாக ஏறு மயில் ஏறும் கந்தப் பெருமான் வடிவமும் பார்க்க வேண்டியவை. சந்நிதி தெருவில் கோவிலில் முன் உள்ள 16 கால் மண்டபம் ஒரு சிற்பக் கலைக் கூடமாக பரிமணிக்கிறது.
இலக்கியச் சிறப்பு: திருப்போரூர் பெருமானை பல அருளாளர்கள் போற்றி பாடியுள்ளனர். ஸ்ரீமத் அருணகிரிநாதரின் "திருப்புகழ்', சிதம்பர சுவாமிகளின் "திருப்போரூர் சந்நிதி முறை', பாம்பன் சுவாமிகளின் "திருப்போரூர் பதிகம்' போன்றவைகள் இத்தலத்தின் பெருமைகளை பக்தி மணம் கமழ எடுத்துரைக்கின்றன.
இவ்வாலயத்திற்கு செல்லும் பக்தர்கள் முக்கியமாக ஆலயத்திற்கு வெளியே உள்ள குன்றில் உள்ள பிரணவ மலையையும், அங்கு கோயில் கொண்டு அருள்புரியும் கைலாசநாதரையும், சற்று தொலைவில் கண்ணுவர் பேட்டையில் உள்ள ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடத்தையும், ஸ்ரீசிதம்பர சுவாமிகள் முதன் முதலில் வந்த பொழுது வழிபட்ட வேம்படி விநாயகரையும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடத்தில் பிரதி வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய விசேஷ நாட்கள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அலகு குத்தி, காவடி எடுத்து வந்தும், துலாபாரம் அளித்தும் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
(சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...