பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "முடி'யும் வளரும்!

 என் மகள் வயது 20. ஆஸ்டலில் தங்கி கல்லூரியில் படிக்கிறாள். யூரின் இன்பெக்ஷன், சளி தொந்தரவு, தொண்டை வலி என ஏதாவது உடல் கோளாறு ஏற்பட்டு நிறைய மாத்திரைகள் சாப்பிடுவாள். இப்போது அளவுக்கு அதிகமாக முடி கொட்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:20 pm

எஸ். சுவாமிநாதன்

 என் மகள் வயது 20. ஆஸ்டலில் தங்கி கல்லூரியில் படிக்கிறாள். யூரின் இன்பெக்ஷன், சளி தொந்தரவு, தொண்டை வலி என ஏதாவது உடல் கோளாறு ஏற்பட்டு நிறைய மாத்திரைகள் சாப்பிடுவாள். இப்போது அளவுக்கு அதிகமாக முடி கொட்டுகிறது. ஒரு விரல் அடர்த்திதான் உள்ளது. ஸ்கின் டாக்டர்கள் பலரிடமும் காண்பித்து இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டும் பயனேதுமில்லை. மாத்திரைகள் நிறையச் சாப்பிட்டதால்தான் முடி கொட்டுகிறதா அல்லது உணவுக் குறைபாடா, தண்ணீர் மாற்றமா? என்று புரியவில்லை. அவளுக்கு முடி வளர என்ன செய்வது?

 எம்.முத்து, திண்டுக்கல்.

 ஒரு நோயைத் தீர்ப்பதற்காக, மாத்திரை மருந்துகளைச் சாப்பிடும்போது, அந்த நோய் மாறியவுடன் மருந்தையும் நிறுத்திவிட வேண்டும். அதன்பிறகு அந்த மாத்திரை மருந்துகளால் ஏற்படும் உடல் தளர்ச்சியை நீக்கும் புதிய மருந்துகளைச் சாப்பிட வேண்டுமே தவிர நோய்க்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதை தோன்றக் கூடும்.

 நோயை அகற்றுவதற்கு சோதனம் (உடல் சுத்தி முறைகளான வாந்தி செய்வித்தல் - பேதி மருந்து சாப்பிடுதல் - வஸ்தி எனப்படும் எனிமா சிகிச்சை - நய்யம் எனும் மூக்கில் மருந்து விடுதல், ரக்தமோக்ஷணம் எனும் காரி ரத்தக் குழாயைக் கீறுதல்) என்றும் சமனம் (சீற்றமடைந்த தோஷத்தைச் சாந்தமடையச் செய்தல்) என்றும் இரு வகை சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் உபதேசித்துள்ளது. உடல் சுத்தி முறைகளைக் கையாளாமல், உடல் கோளாறுகளை அமுக்கி வைத்துவிடும் மருந்துகளை உங்கள் மகள் சாப்பிட்டதாலேயே, அது வேறுவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

 பலவிதமான மாத்திரை மருந்துகளால் ஏற்படும் உடல் பலஹீனம் மாறுவதற்கு ஆயுர்வேதம் சில கோட்பாடுகளை விதிக்கிறது. அவை:

 காலை உணவாகச் சம்பா அரிசிக் கஞ்சி அல்லது கோதுமைக் கஞ்சி, பச்சைப்பயறு சுண்டல், மாமிச சூப், கஞ்சியுடன் கலந்த சுத்தமான பசு நெய் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். கஞ்சி வெதுவெதுப்பாக இருத்தல் நலம். இவை உள்ளத்திற்கு உகந்த உணவு வகையாகும்.

 பசித் தீயைத் தூண்டிவிடும் இலவங்கப்பட்டை, இலவங்கப் பத்திரி, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மதிய உணவு வகைகள் அனைத்தும் மிகச் சிறந்தவை. இரவில் சுத்தமான கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டி, சப்ஜி வகைகளைச் சாப்பிட வேண்டும்.

 தலையில் மூலிகைத் தைலங்களாகிய நீலிபிருங்காதி, கையுண்யாதி, பிருங்கஆமலகாதி, திரிபலாதி, செம்பருத்யாதி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை, எது உங்கள் மகளுக்குப் பொருந்துமோ அதைத் தலையில் முடியைப் பிரித்துவிட்டு, ஒரு பஞ்சில் முக்கிய தைலத்தை விட்டு ஊறவிட வேண்டும். சுமார் 3/4 - 1 மணி நேரம் வரை ஊறிய பிறகு, அரிசி வடித்த கஞ்சியில் குழைத்த நெல்லிக்காய் வற்றல், அதிமதுரம், கரிசலாங்கண்ணி தூள்களைச் சிறிது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, தலையைக் குளிர்ந்த நீரில் அலசலாம். ஆஸ்டலில் இவை சாத்தியமில்லை என்றால் வீட்டுக்கு வரும்போது செய்து கொள்ளலாம்.

 உடலில் குடல் பகுதிகளில் மாத்திரைகளின் தாக்கத்தினால் ஏற்படும் படிவங்கள், விஷச் சேர்க்கைகளை நீக்க உங்கள் மகள், ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஆஸன வாய் வழியாகச் செலுத்தப்படும் கஷாய வஸ்தி, எண்ணெய் வஸ்தி போன்றவற்றை அவசியம் செய்து கொள்ள வேண்டும். இவற்றைச் செய்து கொள்வதால் உடலுக்குச் சுகமும் மனதிற்கு அமைதியும் உண்டாகும். எதையும் ஜீரணம் செய்துவிடும் அளவிற்குப் பசித் தீ வளரும். தாது பரிணாமம் எனப்படும் உணவின் சாரம் வெந்து தாது புஷ்டியை ஏற்படுத்தும்.

 தாதுக்களின் உள்ளே அடங்கியுள்ள தீயானது சிறப்பாகத் தனது செயல்களைச் செய்யத் தொடங்கும். புத்தி, உடல் நிறம் இவற்றில் தெளிவு உண்டாகும். புலன்களின் தெளிவும், நீண்ட ஆயுளும் கொடுக்கும்.

 இதுபோன்ற உணவுமுறைகளையும், சிகிச்சை முறைகளையும் செய்து கொண்டு குடலில் சேர்ந்துள்ள உட்புற அழுக்குகளை வெளியேற்றி, பசித்தீ நன்றாக ஏற்பட்ட பிறகு, சியவனப்பிராசம் எனும் லேகிய மருந்தை பத்து கிராம் அளவில் காலையில் வெறும் வயிற்றிலும், நாரசிம்ஹ ரஸôயனம் எனும் மருந்தை மாலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிட்டுவர, உங்கள் மகளுக்கு முடி நன்றாக வளரத் தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.