இயற்கை வழிபாட்டில், வானம், பூமி, நீர், காற்று, நெருப்பு, மலை, மலைமுகடு, எரிமலை, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், காடு, சிலவகை மரங்கள் போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. துவக்கத்தில், இவை அவற்றில் பொதிந்துள்ள புதிருக்காகவும், உருவாக்கும் அச்ச உணர்வுகளுக்காகவும், இவை வழங்கும் பாதுகாப்பின்மை உணர்வுக்காகவும், வழங்கும் துன்பத்துக்காகவும் வணங்கப்பட்டன. அடுத்தநிலையில் அவை வழங்கும் நன்மையை அறிந்த பிறகு, அதற்காக நன்றி செலுத்தும் பொருட்டும் வணங்கப்பட்டன. இதிலிருந்து அவற்றின் துன்பம் அளிக்கும், நன்மையை வழங்கும் ஆற்றலே தெய்வம் என்ற கருத்தோற்றத்தைப் பெற்றது. அத்தெய்வங்களுடன் நெருக்கத்தை உருவாக்கும் பொருட்டு அவற்றுக்கும் மனித உருவும், சிலபொழுது அறிந்த வலிமையான விலங்கு உருவங்கள் அல்லது கற்பனையான விலங்கு உருவங்களும் வழங்கப்பட்டன.