ரிக் வேதத்தில் ஆநிரை தொடர்பான எழுந்த போர்கள் காவிட்டி அல்லது காவிஷ்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையில், ஆநிரை தொடர்பான பூசல் அல்லது போர்கள் குறித்த மிகப் பழைமையான ஆவணம் ரிக் வேதத்தில் இருந்து கிடைக்கிறது. இந்தப் போர்களில் ரிக் வேத இருடிகள் பலரும் ஆயுதம் ஏந்தி காவிட்டிப் போர் புரிந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர். இந்திரன், அக்னி, ருத்திரன், பூசன், விஷ்ணு, மித்திர வருணர்கள் என்று பலரும், ஆநிரைகளை விரும்பி தாங்கள் புரியும் இப்போர்களுக்கு உதவவும், தங்கள் பக்கம் நிற்கவும், தங்களைக் கைவிடாதிருக்கவும் வேண்டப்படுகின்றனர். இவர்கள் ஒருவரோடு மற்றொருவர் ஒப்பிடப்படுவர். ஒருவர் மற்றொருவரன்றி வேறில்லை என்று போற்றப்படுவர். குறிப்பாக, இந்திரனை ஒப்புவர்களாகக் குறிக்கப்படுவர். பவமான சோமனை நோக்கிய பாடலொன்று, சோமனின் குணத்தைக் குறிப்பிடும் வரிகள் இதற்குச் சான்றாகிறது.