கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உலக அளவில் தொல்லியல் துறை வளர்ச்சி அடைந்த வேகத்தில் பரிசீலனைக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய அறிதல்களுக்கும் உள்ளான பொருள்களுள் புதிர்ப்பாதை போன்று ஒரு சின்னத்தை இணையாகக் கூறமுடியாது. போலவே, உலக செவ்வியல் இலக்கியம் முதல் தற்கால நவீன இலக்கியம் படைத்த இலக்கிய ஆசிரியர்கள் வரை இலக்கிய உலகம் சுவீகரித்துக்கொண்ட வேறொரு தொல்லியல் சின்னத்தையும் காணமுடியாது. இந்திய மதங்களான இந்து மதம், பெளத்தம், சமணம் முதற்கொண்டு, கிறிஸ்தவம், இஸ்லாமியம், ஜொராஷ்டிரம், யூதம் வரையும் மத, சமய அடையாளமற்ற நிலையில், அமெரிக்க ஹோப்பி இந்தியப் பழங்குடியினர், ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர், தமிழகத்து உதகமண்டலத்துத் கோத்தர் பழங்குடியினர் வரை, மரபு வழிபட்ட சடங்குகளுக்குப் பயன்படுத்தும் நிலையில் புதிர்ப்பாதை உள்ளது போன்று வேறொரு சின்னத்தைக் கூறமுடியாது. ஒருவேளை ’ஸ்வஸ்திக் சின்னம்’ இதற்கு இணையாக இனம் மொழி, சமயம் கடந்த உலகலாவியப் பயன்பாட்டில் இருக்கும் சின்னமாகக் குறிப்பிடலாம். நமது இந்திய மரபில், வீடுகளில் அல்லது விழாக்காலக் கோலங்களில் இவ்வகைப் புதிர்ப்பாதைச் சின்னங்கள் தொன்றுதொட்டு இடம் பெற்றுவருவது நமது மரபில் இவை பெற்றிருந்த பண்டைய செல்வாக்கைக் காட்டுவதாக உள்ளது.