பொதுவில், தமிழர் திருநாளான மாட்டுப்பொங்கல் அன்று ‘சன்னியாசிக்கல் வளமைச் சடங்கு விழா’ எடுக்கப்படுகிறது. விழா நாளன்று சன்னியாசிக்கற்களும், இடையிலுள்ள வாய்க்கால் பகுதியும் சுத்தம் செய்யப்படுகின்றன. மஞ்சள், குங்குமம் பொன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு தொடக்க பூசை செய்யப்படுகிறது. தொடக்கப் பூசைக்குப் பிறகு 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் குடங்களில் தண்ணீர் எடுத்துவரப்பட்டு மந்திர எழுத்துப் பொறிப்புள்ள கல் மீது ஊற்றிப் பூசை செய்கின்றனர். இப்பூசையின்போதும் மஞ்சள், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஊற்றப்படும் நீர், இரு கற்களுக்கும் இடையே வெட்டப்பட்ட வாய்க்காலில் நிறைந்து நிற்கிறது. பிறகு சன்னியாசிக் கல்லுக்கு ஆடு பலியிடப்பட்டு, பலியிடப்பட்ட ஆட்டின் தலையை வாய்க்காலில் புதைத்து, வாய்க்காலை மூடிவிடுகின்றனர். சில இடங்களில் வாய்க்கால் அமைப்புடன் அறை போன்று பள்ளம் தோண்டப்பட்டு மேற்சொன்ன வழிபாட்டுச் சடங்கை நிகழ்த்துகின்றனர். சில இடங்களில் ஆடு, கோழி, பன்றி என மூன்று உயிர்கள் பலி தரப்பட்டும் இந்த வளமைச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இது முப்பூசை என்று அழைக்கப்படுகிறது.