தருமபுரி மாவட்டத்தில் பாலவாடி கிராமத்தில் உள்ள இரு நடுகற்கள் ஆரிய வீரன் என்று அழைக்கப்படுகின்றன. ஆரிய வீரனை ஆநிரை வீரன் என்று புலவர் மு. தேவராயன் மற்றும் நடன காசிநாதன் இருவரும் பொருள் கண்டுள்ளனர். (பா. மாணிக்கம், பாலவாடி நடுகற்கள் (கட்), தருமபுரி அரும்பொருட் காட்சியகத் திறப்பு விழா மலர், 1979). ஆரிய வீரன் என்று அழைக்கப்படும் இவை, வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகற்கள் ஆகும். இவ்விரண்டும் 8-ம் பொ.நூற்றாண்டைச் சார்ந்தவை. ஒன்று, கள்வர்களிடமிருந்து ஆநிரையை மீட்டவன் நினைவில் எழுப்பப்பட்டதாகும். (தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி - 2, ப. 138), மற்றொன்று, தகடூர்ப் படையுடன் பொருதி அல்லது தகடூர் படைக்காகப் பொருதி வீழ்ந்தவனுக்கு எடுக்கப்பட்டதாகும். (தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி - 2, ப. 138). இது, இரு நடுகற்களும் வேறு வேறு நிகழ்வுகளுக்காக எடுக்கப்பட்டதை சுட்டுகின்றன. மேலும், ஊருக்குப் புறத்தே மற்றொரு நடுகல் அமைந்துள்ளது. 10-ம் நூற்றாண்டு கன்னட மொழிக் கல்வெட்டைப் பெற்றுள்ள இது, முந்தைய இரண்டுக்கும் காலத்தால் பிற்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டும், ஆநிரை பூசலில் மாய்ந்த வீரனுக்குக் கல்லெடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. (B.R. Gopala & others, Kannada Inscriptions of Tamil Nadu, Ins.no.96).