‘கரியவன்’ என்ற பெயரானது சிவனுக்கு உரிய பெயர்களுள் ஒன்று. சிவன் கருமை நிறத்தவன் என்பதற்கு நமது புராண, இதிகாச, ஆகம நூல்கள் எதிராக உள்ளன என்பது கொண்டு ஆய்கையில் கரியவனாகக் குறிக்கப்பட்ட சிவன், பெரியவன், மூத்தவன் என்ற பொருளிலே என்பது விளங்குகிறது. இந்திரனையும் கரியவன் என்று குறிப்பிடுவதும் இந்த மூத்தவன்/ பெரியவன் பொருளிலேதான். ‘கரிக்கோலம்’, ‘கரிநாள்’ என்பன முறையே கணவனை இழந்த மனைவிக்கு முதல் பத்துநாள் வரை செய்விக்கப்படும் கோலம் மற்றும் தீயநாள், ஆகாத நாள் என்பன அகராதி விளக்கமாகும். நடைமுறையில் இரண்டும் மூத்தோர் நினைவொடு தொடர்புடைய பொருள் தருவனவாக உள்ளன. ‘கரிவரி’ என்பது ஒருவகை வெள்ளைப்பச்ஷாணம் என்பதும், ‘கரிவாளை’ என்பது, பெரிய கடல்மீன் வகையில் ஒன்றை குறிப்பிடுவது என்பதும், ‘கரிகை’ என்பது ஒருவகை செந்நிறமுள்ள கஸ்தூரியைக் குறிப்பிடுவது என்பதும், ‘கரிசற்காடு’ என்பது அடர்காட்டை குறிப்பது என்பதும், ‘கரிசண்ணி’ என்பது, வெள்ளைநிற காக்கணஞ்செடியைக் குறிப்பிடுவது என்பதும் ஒருகாலத்தில் கரு/கரி என்ற பதமானது இன்று அர்த்தபடுத்தப்படும் கருப்பு நிறத்திலிருந்து வேறுபட்ட பொருளை, குறிப்பாக குணப்பொருளைத் தருவதாகவும் விளங்கியதை அறியமுடிகிறது.