இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 12 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 5

5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட புதிர்ப்பாதைகள் இனம், மொழி, சமயம், நாட்டு எல்லை வரையறுப்புகள் என அனைத்தையும் கடந்து, இன்றும் தம்மை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுள்ளன. தம்முடைய நீண்ட நெடும் பயணத்தில், இவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும்கொண்டு வளர்ந்து வந்துள்ளன.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

த. பார்த்திபன்

புதிர்ப்பாதை வளமை சின்னங்கள் (தொடர்ச்சி)

பல வடிவங்களில் கிளைத்த புதிர்ப்பாதைகளில் அரண், சிறை, கோட்டை, வகை என சிலவற்றை சென்ற அத்தியாயம் 11-ல் விளக்கப்பட்டது. அதில் ரோமன் புராணங்களின் சித்தரிப்பில் இருந்து வளர்ச்சி அடைந்த சில ஐரோப்பிய வடிவங்களுக்கும், இந்திய மந்திரம் – தந்திரம் - யந்திரம் ஆகியவற்றின் வடிவங்களுக்கும் உள்ள உருவ ஒற்றுமை குறித்தும் விளக்கப்பட்டது. வரைகலை வடிவங்களான இவை முற்றிலும் சடங்கு சார்ந்து கிளைத்தவை ஆகும். குறிப்பிட்ட இந்த இந்திய உருவங்கள், எக்காலத்தில் கருக்கொண்டு வளர்ந்தன என்பதை அறிய முடியாதுள்ளது.

புதிர்ப்பாதைகள் வடிவங்களும் பயன்பாடும் பன்முகத்தன்மை கொண்டவை என்பது முந்தைய மூன்று அத்தியாயங்கள் வழி அறியமுடிந்தது. இதன் உலகளாவியப் பரவிய நிலையும், அந்தந்த மண் சார்ந்தும், மரபான நம்பிக்கை சார்ந்தும் இதன் பயன்பாட்டை, பன்முகத்தன்மையை கூடுதலாக்கியுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைகொண்ட இதன் ஆதிப்பொருளை அடைவதில் நிலவி வரும் கருத்துகளும், ஒருமித்தபோக்கு கொண்டவை அல்ல. இருந்தும், “வளமும் வலிமையும் பாதுகாப்பும்” இதன் பயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. எவ்வகையான வளம், எவ்வகையான வலிமை, எவ்வகையான பாதுகாப்பு என்பது குறித்த சிந்தனைகள்தான், இதன் மண் சார்ந்த பண்புகளையும், பன்முகத்தன்மையையும் வழக்கியுள்ளன என்பது சிறிது வெளிச்சமாகியது.

இப்பின்னணியில், இந்தியாவில் - தமிழகத்தில் இதன் உற்பத்தியும் பயன்பாடும் சில கேள்விகளை எழுப்புகின்றன. இதன் உற்பத்தி புதிய கற்காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பதை அறிந்தோம். இது மூத்தோரின் நினைவிடமாக, தரைக்குக் கீழ் குகைத்தளமாக உருவாக்கப்பட்டதிலிருந்து துவக்கம் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது. (இந்த அத்தியாயத்தின் இறுதியில் கட்டமிடப்பட்ட பகுதியை காண்க). போலவே, கோர்டினா அடிநிலக்குகையும் ‘சுற்று திருக்குமறுக்கு பாதை’ (Meander pattern) புதிர்ப்பாதை சிந்தனைக்கு வித்திட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

Story image

(கோர்டினா – அடிநிலக் குகை)

Story image

(போஜியொ கஜல்லா புதிர்ப்பாதைக் கல்லறை)

இந்தப் பின்னணியில், புதிர்ப்பாதைகள் பல வடிவம் கொண்டதாக வளர்ந்த நிலையையும் கருத்தில் கொள்வோம். மேத்யூஸ் அவர்கள், நேர்க்கோட்டில் அமைந்த ஒருவழிப்பாதை புதிர்ப்பாதையின் ஹாமில்டன் கோர்ட், ஹாட்பீல்ட் வடிவங்கள் இரண்டையும் விளக்குகிறார்.

Story image

(ஹாமில்டன் கோர்ட் நேர்க்கோடு ஒருவழி புதிர்ப்பாதை)

Story image

(ஹாட்பீல்ட் நேர்க்கோடு ஒருவழி புதிர்ப்பாதை)

இவை இரண்டும், ஹாமில்டன் கோர்ட்டின் கீழ்க்கண்ட இரு வடிவங்களுடன் ஒப்பிடத்தக்கவை என்பார். (Mathews - p.187).

Story image
Story image

இவ்வடிவ விவரிப்புகள், புதிர்ப்பாதைகள் காலந்தோறும் புதிய வடிவங்களுடன் வழக்கில் இருந்துள்ளதை விளக்குகின்றன. இப்புதிய வடிவங்கள், ஆதி வடிவம் ஒன்றிலிருந்து கிளைத்தன என்பது எளிதில் புரிபடுவதாகும்.

இப்பின்னணியில், இந்தியப் புதிர்ப்பாதைகளின் வடிவங்கள் குறித்தும் பயன்பாடு குறித்தும் கூடுதல் பரிமாணத்துடன் அணுக வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றது. கோவாவில், பசாய்மோல் கீறள் புதிர்ப்பாதைச் சின்னம், இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் தொன்மைவாய்ந்த புதிர்ப்பாதைச் சின்னங்களில் ஒன்று என்பதும் முந்தைய அத்தியாயங்களில் காணப்பட்டது. இது, இந்தியாவுக்கு இச்சின்னம் வழிபாட்டுக்குரிய ஒன்றாக அறியப்பட்டிருந்த உண்மையை நமக்கு விளக்கவல்லது. சடங்குப் பயன்பாட்டில், இந்திய வடிவங்கள் கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைத்த பொ.ஆ.1600-ன் தாந்ரிக கைப்பிரதியில் உள்ள புதிர்ப்பாதை, இதன் சடங்குப் பயன்பாட்டில் பெற்றிருந்த இடத்தை அடையாளப்படுத்துகிறது.

Story image

(ராஜஸ்தான் மாநிலம், பொ.ஆ.1600-ன் தாந்ரிக கைப்பிரதி)

இறுதிப் பொருள்

புதிர்ப்பாதையின் இறுதிப்பொருள் என்ன? என்ற கேள்வி அனைவரிடமும் நிற்பதே. விர்ஜீனியாவின் பதில், இது ஆதிப் பொருள் அல்ல; ஆன்மிகம் சார்ந்ததே என்ற புரிதலை வழங்கும். இருந்தும், இது பயன்பாட்டில் இருக்கும், ஆனால் நாம் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு ஆதிப்புரிதலின் தற்கால விளக்கம் எனலாம். பதில் - “இத்தொன்மை உருவம், கடவுளும் மனிதனும் சந்திக்கும் புனித மலையைப் போன்றது.” (Virginia Westbury, p.35) இவர் காட்சிப்படுத்தும் புனித மலை அல்லது புனித சுழற்சி முகடு வடிவம், நமக்கு நெருக்கமான தாந்ரிக ‘மகா மேரு’ வடிவமாகும்.

Story image
Story image

(தருமபுரி அகழ்வைப்பகத்தில் உள்ள ‘மகா மேரு’ சிற்பம். நன்றி: தொல்லியல் துறை அகழ்வைப்பகம், தருமபுரி)

அங்கோர்வாட் ஆலயம்

உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் ஆலயம், மகா மேருவின் வடிமைப்பில் வடிவமைக்கப்பட்டது என்பது இதன் பொருளுடன் நெருங்கியதாகும்.

Story image

(அங்கோர்வாட் ஆலயம்)

நேபாளம் பசுபதீஸ்வரர் கோயில்

நேபாளத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் சுற்றுப் பிராகாரம், ‘ஸ்வஸ்திகா - புதிர்ப்பாதை கலப்பு வடிவம்’ கொண்டதாகும். இப்பாதையில் 500 லிங்கங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. பட்கான் என்ற இடத்தில் அமைந்துள்ள தத்தாரியா கோவில் விதானத்தில், ‘ஸ்வஸ்திகா - புதிர்ப்பாதை கலப்பு வடிவம்’ ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இச்சித்திரம், நகரத்தை காத்த சிமந்கதாவின் கதையாகும். (Kern, p.301 & 303).

தமிழகப் பாறை ஓவியங்களில் ஸ்வஸ்திக் (‘சுற்று திருக்குமறுக்கு பாதை’ - Meander pattern) மற்றும் புதிர்ப்பாதை வடிவங்கள்

தமிழகப் பாறை ஓவியங்களில் காணப்படும் குறியீடுகள் பற்றிய முறையான ஆய்வுகள் இன்னும் ஒருவராலும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குறியீடுகளின் பொருள் அநேகமாக அறியப்படாத நிலையே நீடிக்கிறது, அதிகபட்சமாக, அவை குறியீடுகள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் (Geometrical Marks or Designs) என்ற பெயரைப் பெறுகின்றன.

கொல்லூர் ஓவியம்

திருக்கோயிலூருக்கு அருகில் அமைந்த இடம் கொல்லூர். இங்குள்ள பாறை ஓவியம், குறியீடுகளால் ஆனது. மனித வடிவம் அற்ற இவ்வோவியம், ஆய்வாளர்களின் கவனத்தை ஏனோ கவரவில்லை. இவ்வோவியத்தில், ஒரு பல்லியின் உருவம் மட்டும் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை உடும்பு என்று சொல்வோரும் உண்டு. இவ்வோவியம், புதிய கற்காலத்தைச் சார்ந்தது என காலம் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகப் புதிய கற்காலத்தின் துவக்க காலை நிலை, மு.பொ.ஆ. 4000 முதல் 2500 வரை என கருத்து முரண் இருப்பினும், இவ்வோவியத்தை மு.பொ.ஆ. 2500 பிற்பட்டுக் கணிக்க அவசியம் இல்லை.

இவ்வோவியத்தில், விலங்கு உருவத்துக்கு மேல் ‘ஸ்வஸ்திக்’ குறியீடு ஒன்று இடம் பெற்றுள்ளது.

Story image

(கொல்லூர் - பாறை ஓவியம் - ஸ்வஸ்திக் மற்றும் பல்லி வடிவம்)

இதற்கு அருகில் தீட்டப்பட்ட மற்றொரு ஓவியம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. இதில், புதிர்ப்பாதை சிந்தனைக்கு வித்திட்ட ‘சுற்று திருக்குமறுக்கு பாதை’ (Meander pattern) வடிவம் தீட்டப்பட்டுள்ளது. பழமை காரணமாக, இது மெல்லிய, மங்கலான பொழிவுடன் விளங்குகின்றன.

Story image

(கொல்லூர் - ‘சுற்று திருக்குமறுக்கு பாதை’ (Meander pattern) வடிவம்)

செத்தவரை ஓவியம்

தமிழகத்தில் கிடைத்த செத்தவரை ஓவியம், பலவகையில் குறிப்பிடத்தகுந்தாக விளங்கிவருகிறது. இதுநாள் வரை, இதன் கவனிக்கப்படாத பகுதி, இதன் குறியீடு ஆகும். இது, அலையலையாகப் படரும் ‘ஸ்வஸ்திக்’ அல்லது அதன் இணை வடிவமாகக் கருதும் ‘கிராஸ் என்ற கூட்டல் குறி வடிவம்’ ஆகும். இதன் காலம், மு.போ.ஆ. 1500 ஆகும்.

Story image

இவ்வடிவத்தின் தொன்மையான தொல்லியல் சான்றாக, சிந்து சமவெளி பண்பாட்டைச் சார்ந்த சுடுமண் முத்திரையாகும். இதன் காலம், மு.பொ.ஆ. 2500 என கணிக்கப்பட்டுள்ளது.

Story image

(சிந்துப்பகுதி முத்திரைகள்)

ஸ்வஸ்திக் வடிவத்தை புதிர்ப்பாதையாக பரிமாணம் கொள்ளும் நிலைகளை கீழ்க்கண்ட ஓவியம் சித்தரிக்கிறது.

Story image

சென்றாயனபள்ளி பாறை ஓவிய புதிர்ப்பாதை

பையம்பள்ளிக்கு அருகில் அமைந்த ஒரு இடம் சென்றாயனபள்ளி. இவ்வோவியத்தில் இடம்பெற்ற கோலம் வடிவம் என்று அறியப்படும் வரைகோட்டுருவம் ஒரு புதிர்ப்பாதையாகும்.

Story image
Story image
Story image

(சென்றாயனபள்ளி பாறை ஓவிய புதிர்ப்பாதை)

இதன் ஒரு பகுதி (படத்தில் வடகிழக்கு மேல் பக்கம்) கொண்டிருக்கும் வழிகள், இது புதிர்ப்பாதை என்பதை விளக்கவல்லது.

ஆலம்பாடி ஓவியங்கள்

மேத்யூ மற்றும் கேர்ன் இருவரும் கீழ்க்கண்ட வடிவத்தை, புதிர்ப்பாதையின் மற்றொரு வடிவமாக விளக்குகின்றனர்.

Story image

இவ்வடிவத்துக்கு இணையான ஓவியத்தை நாம் ஆலம்பாடி ஓவியத்தில் காண்கிறோம். (Methews, p. 155). (ஆலம்பாடி ஓவியத்தின் படங்கள் இங்கு வழங்கப்படவில்லை. T.S. Sridhar (Ed), Rock Art of Tamil Nadu, Department of Arcgaeology, Government of Tamil Nadu, 2005, plates, 10,11,12 படங்களையும் மற்றும் R.Kannan, Monograph on Rock Art and Cave Art, pp, 27, 67 படங்களையும் காண்க).

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் ஜாவா மற்றும் சுமத்ரா நாடுகளுக்கு…

இந்தியாவிலிருந்து புதிர்ப்பாதை வடிவங்களும் கருத்துகளும், ஆப்கானிஸ்தான், ஜாவா, சுமத்ரா நாடுகளுக்குப் பரவியதை, அங்கு கிடைக்கும் பல தொல்பொருள் சான்றுகள் கொண்டு அறியமுடிகிறது. (Kern, pp. 296-298) பொ.நூ. 8 மற்றும் 9-களில் இருந்து 16-ம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் பரவும்வரை, இந்தியச் செல்வாக்கில் இருந்த பகுதிகளாக இந்தப் பகுதிகள் விளங்கின. சில பகுதிகள், இந்திய அரசர்களாலும் ஆட்சி புரியப்பட்டிருந்தன.

பொ.ஆ. 1342 முதல் 1356 வரை, தீவிர மகாயான பெளத்தத்தின் அபிமானியாக ஆதித்தியவர்மன் என்பவன் மத்திய ஜாவா பகுதியில் ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள் உள்ளன.*1 ஜாவா மோதிரங்களில் குறிப்பிடப்படும் புதிர்ப்பாதை வடிவங்கள், இந்தியச் செல்வாக்கில் உருவானவை. அத்துடன், மரப்பட்டை ஏடுகள் கொண்ட ‘பதக் மந்திரப் புத்தகங்கள்’ இந்தியச் செல்வாக்கை மிகையாகக் கொண்டிருப்பவை. 31, 37, 59 ஏடுகள் கொண்டதாக பதக் மந்திரப் புத்தகங்கள் கிடைத்துள்ளன. ஏழு சுற்று வட்ட புதிர்ப்பாதை வடிவம் வரையப்பெற்றுள்ள இவை, 19-ம் நூற்றாண்டை சார்ந்தவை. ‘சி ஜொனகா கோட்டை’ என அவ்வேடுகள் புதிர்ப்பாதையைக் குறிப்பிடுகின்றன.

“சாமைலி வீடு” என்று அழைப்படும் ஆப்கானிஸ்தான் புதிர்ப்பாதை, ஒரு வரையுருவமாகும். ‘சாமைலி வீடு’ அழகிய கதைப்பின்னல் கொண்டது. சாமைலியின் மறைக்கப்பட்ட வீட்டின் வாயிலை சாமைலி மட்டுமே அறிவாள். அவளது தந்தை குன்கார் மன்னன், அவளை முதலில் காணும் ஆடவனுக்கே அவளை மணம் முடித்துத் தருவதாக வாக்களிக்கிறார். நமாஸ்லூம் மன்னனின் ஏழு புதல்வர்களில் அறுவர், சாமைலியை முதலில் கண்டு அவளை மணமுடிக்கும் ஆவலில் தோற்று தம் உயிரை இழக்கின்றனர்.

இளையவன் ஜலாத் கான், தன் சகோதர்களின் மரணத்தை அறிகிறான். அதனால் அவன் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள தீர்மானிக்கின்றான். தான் யார் என்பதை வெளிக்காட்டாது, ஜாலாத் குன்காரின் சிற்பியான புத்காஸிடம் உதவியாளராகச் சேருகிறான். தன்னைப் போன்ற உள்ளீடற்ற சிலை ஒன்றை செய்ய புத்காஸை இணங்கவைக்கிறான். அது டிரோஜன் குதிரை போன்றது. அதனுள் ஜலால் தன்னை மறைத்துக்கொள்ளமுடியும். புத்காஸ் ஜலாலுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, அச்சிலையை மன்னன் அவைக்குக் கொண்டுசெல்கிறான்.

பூசையின் பாராயணத்தின் முடிவில், அச்சிலை உயிர்பெற்று அரசன் முன் நடனமாடும். இந்த விந்தை, இளவரசி சாமைலியை ஈர்த்தது. அவள் அச்சிலையை தன் அறைக்குக் கொண்டுவரச் செய்தாள். இளவரசி அயர்ந்து தூங்கும் நடுஇரவில், சிலையில் இருந்து ஜலாத் வெளிவந்து அவளது கையில் மோதிரம் ஒன்றை அணிவித்துவிட்டு மறைந்துகொள்கிறான். கண்விழித்த இளவரசி தன் விரலில் புதிராக உள்ள மோதிரத்தைக் கண்டாள்.

மறுநாள் இரவு, அவள் அச்சிலையிடம் “நீ யாராகயிருந்தாலும் பரவாயில்லை. ஒரு நாவிதனோ, நெசவனோ, யாராகவேணும் இருக்கட்டும். நீயே என் கணவன்” என்றாள். அதற்கு அச்சிலை, “நான் நாவிதனுமில்லை, நெசவனுமில்லை. நான் ஜலாத் கான். நமாஸ்லூம் மன்னனின் மகன்” என்று பதிலளித்தது. பின்னர், ஜலாத் வெளிவந்து அவளுடன் பத்து இரவுகளை ரகசியமாகக் கழிக்கிறான். பின் அவன் மன்னன் குன்காரிடம் சென்று அவர் மகளைக் கரம்பிடிக்க அனுமதி கேட்கிறான்.

சாமைலி உதவியுடன் அவள் வீட்டை அவன் காண்கிறான். இதன்மூலம், மன்னின் நிபந்தனைகள் நிறைவேறியதால், மன்னனும் திருமணத்துக்கு சம்மதிக்கிறான். மேலும், உறுதிசெய்தபடி நாட்டையும் அன்றே அவனிடம் ஒப்படைகிறான். இதன்மூலம், தன் சகோதர்களின் மரணத்துக்கு பழிதீர்த்துக்கொள்கிறான் ஜலாத்.

இக்கதையும், புதிர்ப்பாதை ஒரு வலிமைமிகுந்த கோட்டை என்றே குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.

*

தற்காகத்தில், ஒரு தொல்பொருள் சின்னத்தின் பிரம்மாண்டமான மறுபிறப்பு ஏன்?

5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட புதிர்ப்பாதைகள் இனம், மொழி, சமயம், நாட்டு எல்லை வரையறுப்புகள் என அனைத்தையும் கடந்து, இன்றும் தம்மை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுள்ளன. தம்முடைய நீண்ட நெடும் பயணத்தில், இவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும்கொண்டு வளர்ந்து வந்துள்ளன.

புதிர்ப்பாதைகளின் மறுமலர்ச்சிக் காலம் என்று 1960-70-களுக்குப் பிறகான காலகட்டம் குறிக்கப்படுகிறது. உண்மையில், இம்மறுமலர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரேப்பிய நாடுகளில் மட்டும் ஏற்பட்டதாகும். உலகின் பெரும் பகுதியில் இம்மறுமலர்ச்சி என்பது ஏற்படவில்லை. ஏற்படும் அவசியம் உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படித்தான், புதிர்ப்பாதையின் மறுமலர்ச்சியை மதிப்பிடவேண்டி உள்ளது.

ஐரோப்பாவில், இரு உலக யுத்தங்களுக்குப் பிறகு உருவான தனி மனித வாழ்வியல் சிக்கல்களும், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களால் மட்டும் தாக்குறவைப் பெற்ற பல்வேறு சிந்தனைப்பள்ளிகளின் குறுகிய வாழ்நாள் காலமும், சாராசரி மனிதன் அல்லது பொது மனிதனுக்கு வாழ்வியல் மற்றும் மனநெருக்கடிகளுக்கு நிவாரண மருந்தாக எவ்விதத்திலும் அமையவில்லை. இதே காலகட்டத்தில் எழுந்த உலகமயம் என்ற வர்த்தகக் கொள்கை, நிறுவனங்களுக்கு அல்லது நிறுவனங்கள் வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்கானது என்ற புரிதல் விழிப்புணர்வு சராசரி மனிதனுக்கு எட்டிவிட்டது.

உலகமயமாதல் என்பது ‘பாரம்பரியமான மண் சார்ந்த அகநாட்டு மரபுகளைக் கைவிடச் செய்யும் செயல்; அயலகத்தின் மீது அக்கரைக்குப் பச்சை என்ற ஈர்ப்பின் வாணிப நோக்கம்’ என்பது புரியத் தொடங்கிய காலகட்டமாகும். உலகயுத்தம் மற்றும் உலகமயம் என்ற அடுத்தடுத்த தாக்குதல்களில் சிதைவுற்றது அமெரிக்க, ஐரோப்பிய மனித மனங்கள்தான். நெருக்கடிகளுக்கு உள்ளானதும் அமெரிக்க - ஐரோப்பியப் பொருளாதாரம்தான்.

“எளிய வாழ்வியலையும்; அன்பும், சகோதரத்துவமும் நிரம்பிய வாழ்வியல் சூழலையும்; மன அமைதியையும் தேடிய தனிமனிதத் தேடுதலே புதிர்ப்பாதைகளின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இதில், மதங்களின் பங்களிப்பு ஏதுமில்லை; மத நிறுவனங்களின் பங்களிப்பும் ஏதுமில்லை; அரசுகளின் பங்களிப்பும் ஏதுமில்லை”. புதிர்ப்பாதைகள் விடுத்த உடனடி ஈர்ப்பு, கேளிக்கை விரும்பிய மனத்தின் கண்டுபிடிப்பு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு புதிர்ப்பாதைகளின் மறுமலர்ச்சிக்கான காரணத்தின் பின்புலத்தை இவ்வாறுதான் விளக்கிக்கொள்ள முடிகிறது.

“அறிவின் அமைதியான பண்டைய பாதை”

என்ற விர்ஜீனியா வெஸ்ட்பரியின் புரிதலும்,

“புதிர்பாதை ஒரு சல்லடை

அதுவே அண்டமும், உலகமும்

மனித இனத்தின் வாழ்வு

பூமியின் கருவறை

அதன் மையத்தை தேடும், பயணம்

நம்மை அறியும் வழி”

என்ற உர்சா ரண்டிங்கர் டிங்கா உணர்தலும், இதையே நமக்கு உணர்த்துகின்றன.

இதன்விளைவே, ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் தேதியை உலகப் புதிர்ப்பாதை தினமாக புதிர்ப்பாதை குழுக்கள், ஆர்வலர் அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ல், ஏழாவது உலகப் புதிர்ப்பாதை தினம் கொண்டாடப்பட்டது,

ஒரு தொல்பொருள் என்ற அறிதல் நீங்கி, ஜப்பான் நீங்கிய ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கிந்திய, மேற்கிந்திய நாடுகளில் புதிர்ப்பாதைகளின் மறுமலர்ச்சி நிகழவில்லை. இப்பகுதியின் அடிப்படை வாழ்வியல் நோக்கும், வாழ்வியலுமே இதற்குக் காரணமாக இருக்கிறது எனலாம். ஆப்பிரிக்க மற்றும் தென்னமெரிக்காவிலும் இதன் மறுமலர்ச்சித் தாக்கம் காணப்படாமைக்கு, பொருளாதார நெருக்கடி மற்றும் உள்முகமான வாழ்வியல் தேடல் என வேறு காரணங்களை நாம் அடையமுடியும்.

*

புதிர்ப்பாதைகளின் பன்முகப் பயன்பாட்டில் பெருங் கற்கால நினைவுச் சின்ன வகையாகவும் ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது?

முந்தைய அத்தியாயத்தில், புதிர்ப்பாதைகள் பெருங் கற்கால நினைவிடச் சின்னங்களில் ஒன்றா? மூத்தோர் நினைவிடச் சின்னங்களில் ஒன்றா? என்ற வினா எழுப்பி, அதற்கு ‘பெருங் கற்காலத்துக்கு உரியதாக இருக்க முடியுமே அன்றி, மூத்தோர் நினைவிடச் சின்ன வகைகளில் ஒன்றாக இருக்கமுடியாது. இவ்விரு சின்னங்கள் எழுப்பப்பெறுவதற்கான நோக்கங்கள் வேறு வேறு தன்மை கொண்டவை என்று தெரிவித்திருந்தேன்.

அப்பகுதி வெளியான பிறகும், இப்பகுதின் கையெழுத்துப் பிரதியையும் படித்த நண்பர்கள், என் முந்தைய கருத்தை மறுபரிசீலனை செய்யவும், மேலும் ஆய்வுக்கு உட்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கியபடியே இருக்கின்றனர்.

மேலாய்வு, புதிய அடையாளங்களை எனக்கு வழங்கியது. அது பைரேகவுனி மற்றும் கம்பைநல்லூர்-வெதரம்பட்டி புதிர்ப்பாதைகள், பெருங் கற்காலத்தில் எழுப்பட்ட மூத்தோர் நினைவுச் சின்ன வகைகளின் ஒன்றாகவும் வடிவம் பெற்ற புதிர்ப்பாதைகள் என்ற முடிவுக்கு வரச் செய்கிறது. இருந்தும், இதனை உறுதி செய்வதை அகழாய்வின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

* உண்மையான புதிர்ப்பாதை என்று ஒரு சாராரால் நம்ப்பப்படும் மு.பொ.ஆ. 3200 சேர்ந்த, மால்டாவில் (Malta) உள்ள ‘துஞ்சினர் கூடம்’ (Hypogeum), தரைமட்டத்துக்குக் கீழ் ஒரு சுண்ணாம்புப் பாறையைக் (Limestone) குடைந்து உருவாக்கப்பட்ட குகை போன்ற அமைப்பாகும். இக்கூடம், இறந்த மூத்தோர்களின் எழும்புகள் சேகரித்து வகைக்க அல்லது பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகும். (பாறையைக் குடைந்து உருவாக்கப்படும் இந்த வகையினதாக நாம் இன்றைய கேரளப் பகுதிகளில் காணப்படும் பெருங் கற்கால குடைவறை மூத்தோர் நினைவுச் சின்னத்துடன் ஒப்பிடலாம். ஆனால், இது நிலமட்டத்துக்கு மேல் குடையப்படுவதாகும்). இந்த பாதாள புதிர்ப்பாதைக் கோயில், குடைந்து உருவாக்கப்பட்ட பல அறைகளைக் கொண்டது. இங்கிருந்து அறியப்பட்ட பலவகையான சடங்குகள், நிகழ்த்தப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கொண்டு, இவ்விடம் ‘கட்டுரம் வாய்ந்த தாய் தெய்வம்” (Robust looking Goddess) ஒன்றுக்கு எழுப்பப்பட்ட கோயில் அல்லது ஒரு தீர்க்கதரிசிகளுக்கான அல்லது இறப்பு மற்றும் மறுபிறப்பு தொடர்பான வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்த்துவதற்கான இடம் என்று கருதப்படுகிறது. இதுகொண்டு, புதிர்ப்பாதைகள் என்பவை, ஆதியில் நிலத்துக்குக் கீழ் இவ்வாறு அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கோ அல்லது அல்லது இங்கிலாந்தின் ஸ்டோன்ஹென்ஞ் (Stonehenge) போன்ற கல்வட்டங்களுக்கோ இடப்பட்ட பெயராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது (Virginia Westbury, 2001, p. 36).

கட்டுரம் வாய்ந்த தாய் தெய்வத்துடன், நமது மரபில் ‘துர்க்கை’, ‘காளி’ ‘சூலி’ வடிவ தாய்த் தெய்வங்களை ஒப்புமைப்படுத்தலாம். இவை ஒன்றின் பல பெயர்களாகக் காண்பது வழக்கே. நமக்கு இவை வேட்டைத் தெய்வங்கள், வெற்றியைத் தரும் தெய்வங்களாகும். கோவா பன்சிமொல் பாறைக்கீறள் வகைப் புதிர்ப்பாதைக்கு அருகில் பலவகையான தாய் தெய்வங்களின் உருவங்களும் கீறப்பட்டுக் காட்சியளிப்பது, இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவைக்கிறது.

புதிர்ப்பாதை வடிவமைப்பு கொண்டு, பிரம்மாண்டமான கோவில்கள் பண்டைக் காலத்தில் எழுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் அமைக்கப்பட்ட கோவில் ஒன்றைப் பற்றி ‘எகிப்திய புதிர்ப்பாதை’ என்ற வியந்து குறிப்பிடும் கிரேக்க வரலாற்று ஆசிரியன் ஹிராடோடஸின் குறிப்பு இவ்வாறு உள்ளது –

“அக்கோயில், மூத்தோர் மண்டலத்துக்கு, அதாவது இறந்தவர் அதிகாரத்துக்கு உட்பட்ட உலகுக்கு நெருக்கமான மற்றும் எகிப்திய பாதாள உலகின் கடவுளான (Realm of the Dead and of the Egyptian underworld) முதலைக் கடவுளான ‘சிபெக்’கை (Crocodile God Sebek) சிறப்பித்து எழுப்பட்டதாகும், இக்கோவில், பிரமிடுகளைவிட பிரமிப்பூட்டுவது, மேம்பட்டது.”

பிற்காலத்திய ரோம ஆசிரியர்கள், இதுவே நேசஸ்ஸில் அமைக்கப்பட்ட ‘கிரீட்டன் புதிர்ப்பாதை’களை உருவாக்கத்தூண்டுதலாக இருந்தன என்று  குறிப்பிடுகின்றனர்.

ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்கர்களும், அதற்குபிறகு ரோமர்களும் புதிர்ப்பாதை என்பதின் முழுமையான ஆதிப்பொருளை அறியாமலேயே இருந்துள்ளனர். புதிர்ப்பாதை என்ற பெயரை நேஸஸ் (Knosses) அரண்மனையின் பெயர்கொண்டே தருவித்தனர் என்று இதனை கெர்ன் அவர்கள் வெளிச்சமாக்குகிறார். ஆனால், இன்று இப்பெயர் ‘கல்’ (Stone) என்பதன் தொடர்புடையதாக அறியமுடிகிறது. அதாவது “கல்லால் ஆன இடம்” (place of stone - Kern). நமது பெயர் மரபில் கல்லறை. கல்திட்டை, அல்லது கல்வட்டம்’ (?)

ஆதிப் பொருள் இவ்வாறு மறை பொருள் (Esoteric) அர்த்தத்தில் இருக்க, ரோம் நாட்டு ஆசிரியர்கள், ஒரு புதிர் நிறைந்த கட்டட அமைப்பையே காட்டினர் எனலாம்.

கல்வட்டம் என்பது கல்லறை, கல்திட்டை அல்லது தாழி அல்லது பேழை ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ கொண்ட ‘பல்கூட்டு வடிவம்’ (த. பார்த்திபன், தொன்மைத் தடயங்கள், பக். 47-84) என்பது கவனிக்கத்தக்கது.

கல்லறை கூடிய கல்திட்டை எவ்வாறு இன்றைய கோயில்களுக்கும், பெளத்த ஸ்தூபிகளுக்கும் முன்மாதிரியாக விளங்கின என்பது மேலே விளக்கப்பட்டது.

மேற்கோள் விளக்கம்

Winkler Johannes என்பவரது ஆய்வில் இருந்து கெர்ன் அவர்கள் இவ்விவரங்களைத் தருகிறார். (கெர்ன், பக். 296-298). ஆர்.சி.  மஜும்தார், தன்னுடைய “Ancient Indian Colonies in the Far East, Vol-2” புத்தகத்தில், இவனது ஆட்சி குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார். இவன் ஒரு ‘தாந்ரிக் பெளத்தம்’ சார்ந்தவன் என்று அவர் குறிப்பிடுகிறார். இவனது வீழ்ச்சி, கிழக்கிந்தியத் தீவுகளில் இஸ்லாம் வேரூன்றுதல் எளிதானது என வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.

*

பார்வை நூல்கள் (அத்தியாயம் 11 மற்றும் 12)

W.H. Matthews, Maze and Labyrinths Their History and Development. Dover, (reprint) 1985.

Hermann Kern, Through the Labyrinth, Prestel, London, 2002.

Baring, Anne & Cashford, Jules, The Myth of the Goddess: Evolution of an Image, Penguine Arkanna, 1993.

Doob, Penelope Reed, The Idea of the Labyrinths, Cornell University Press, 1990.

Virginia Westbury, Labyrinths, Ancient Paths of Wisdom and Pease.

Caerdroia: The Journal of Mazes and Labyrinths.

T.S. Sridhar, (Ed), Rock Art of Tamil Nadu, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai, 2005.

R.Kannan, Monogram of Rock Art and Cave Art, Government Museum, Chennai, 2003.

R,C, Majumdar, Ancient Indian Colonies in the far East, Vol-II, Asoke Kumar Majumdar, Ramna, Dacca. 1937.

ஆனந்த குமாரசாமி, சிவானந்த நடனம், தமிழ்நாடுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1980.

வை. கணபதி ஸ்தபதி, சிற்பச் செந்நூல், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை, 2001.

எஸ். நாராயணசுவாமி, தெய்வத் திருமேனிகளின் தியானம், ரூபம், யந்திரம், மந்திரம், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை. 2010.

இராசு பவுன்துரை, தமிழகப் பாறை ஓவியங்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 1986.

இராசு பவுன்துரை, தமிழகப் பாறை ஓவியங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2001.

இராசு பவுன்துரை, பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், உலகத் தமிழாராட்சி நிறுவனம், சென்னை, 2004.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.