இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அத்தியாயம் 16 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 9

தென்னிந்தியாவில், இறந்தவர்களின் உடலை அப்படியே புதைக்கவில்லை. இறந்தவர் உடல் பல நாட்களுக்கு வசிப்பிடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து மிருகங்கள், பறவைகள் போன்றவை சதைப் பகுதிகளை உண்ட பிறகு மிஞ்சிய எழும்புகளை, முக்கியமாக மண்டை ஓடு, கை, கால் எலும்புகளை சேகரித்து, ஈமச்சின்னங்களில் வைத்து அடக்கம் செய்யும் மரபு வழக்கில் இருந்தமையை அறியமுடிகிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

த. பார்த்திபன்

(பெருங் கற்படைச் சின்னங்கள் தொடர்ச்சி)

பெருங் கற்காலம் பற்றிய ஆய்வுகள்

தமிழகத்தில் உள்ள ஈமச்சின்னங்கள் குறித்து ஆய்வு செய்த அனைவரும், “கோயில்களுக்குப் பேர்போன தென்னிந்தியாவில், ஈமச்சின்னங்கள் அவற்றைவிட பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன” என்ற செய்தியில் ஒற்றுமையுடையவர்களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் சராசரியாக 5 கி.மீ. சுற்றளவில், பெருங் கற்படைச் சின்னங்களின் எச்சங்களைக் கொண்ட ஓரிடத்தைக் காணமுடிகிறது எனலாம்.

பொ.ஆ. 1950 முதல், பெருங் கற்படைப் பண்பாடு குறித்த ஆய்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இக்காலத்தில் இலக்கியம், மொழியியல், மானிடவியல், தொல்லியல் துறையில் பயிற்சி பெற்றோர், இப்பண்பாடு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டனர். இதன்விளைவாக, இப்பண்பாடு இந்தியாவில் உருவான விதம், இதனை உருவாக்கியோர் போன்ற திசையில் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இவர்களில் பெரும்பான்மையோர், இந்தியாவில் இப்பண்பாடு தோன்றவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இந்தியாவுக்கு வெளியிலிருந்தே இப்பண்பாட்டைத் திராவிட மொழி பேசுவோரின் மூதாதையர் இந்தியாவில் புகுத்தினர் என்றும், இதனால் அப்போது இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள் மீது இது திணிக்கப்பட்டது என்றும் தம் கருத்துகளை முன்வைத்தனர்.

இப்பண்பாட்டின் முக்கிய வெளிப்பாடாக உள்ள கருப்பு-சிவப்பு மட்கலத்தின் காரணமாக, இக்காலப் பண்பாடே “கருப்பு-சிவப்பு மட்கலப் பண்பாடு” என்றும் குறிப்பிடப்பட்டது. தென்னிந்தியாவில் அல்லது திராவிடர்களின் பெருங் கற்படைப் பண்பாட்டின் பெருவளர்ச்சிக்கும், நாகரிக முதிர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் இந்தக் கருப்பு-சிவப்பு மட்கலப் பண்பாட்டை அறிமுகம் செய்தவர்களே என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இந்தவகையான ஆய்வுகள், தென்னிந்தியாவில் இருப்பின் கண்டுபிடிப்பு, உபயோகம், பெருங் கற்படைப் பண்பாட்டில் அதன் பங்களிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட்டு பல வகையான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்தியக் காட்சிகள்

இந்தியாவில், பெருங் கற்படைப் பண்பாடு என்றால் அது தென்னிந்தியாவில் குறிப்பாக கோதாவரி நதிக்குக் கீழ் உள்ள தென்னிந்தியாவின் பண்பாடு என்ற தோற்றம் உருவாகிவிட்டது. தென்னிந்தியாவில், இப்பண்பாடு மிகைவளர்ச்சி கொண்டிருந்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதோ உண்மை இந்தியாவின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் எண்ணிக்கை குறைவாகவாவது இப்பண்பாடு வெளிப்பட்டுள்ளது என்பதிலும் உள்ளது. இதனை கே.எஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுகளும் தொகுப்பும் தெளிவுபடுத்துகின்றன. (K.S. Ramachandran, A Bibliography on Indian Megaliths, State Department of Archaeology, Government of Tamil Nadu, 1971). இந்தியாவின்  காணப்படும் பெருங் கற்படைண் சின்னங்களை, பிரதேசங்கள் அடிப்படையில் அவர்,

1. அஸாம் மற்றும் மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பெருங் கற்படைச் சின்னங்களின் வகைகள் -  “குத்துக்கல் (Menhir) மற்றும் கல்திட்டைகள் (Dolmem)”.

2. காஷ்மீரில் உள்ளவை - “குத்துக்கல் (Menhir)”.

3. இமயமலைத் தொடரில், மலைசார்பு நிலங்களாகத் தாழ்ந்த கரையோரப் பகுதிகளில் உள்ளவை - “கற்குவை (Cairn)”.

Story image

(கல் திட்டை- Dolmen)

4. உத்தரப் பிரதேசத்தில் உள்ளவை - அலகாபாத், பண்டா, மிர்சார்பூர், வாரணாசி ஆகிய பகுதிகளில் உள்ள “கல்வட்டங்கள் (Stone Circle), கற்குவைகள் (Cairn Circle), கற்பதுக்கைகள் (Stone Cists)”.

5. ராஜஸ்தானில் உள்ளவை - “கல்வட்டங்கள், கற்குவைகள், குத்துக்கற்கள்”.

6. மத்திய இந்தியாவில் காணப்படுபவை - கல்வட்டங்கள், கற்குவை, கல்திட்டை (Dolmen) மற்றும்

7. தென்னிந்தியாவில் காணப்படுபவை. (இவை குறித்து அடுத்து வரும் அத்தியாயங்களில் விளக்கப்படும்)

என வகைப்படுத்திக் காண்கிறார்.

ஈமச் சின்னமும் நினைவுச் சின்னமும்

இங்கு ஈமச் சின்னம் மற்றும் நினைவுச் சின்னம் இரண்டுக்கும் இடையே உள்ள வேற்பாட்டை அறிந்துகொள்வது, நமது மொழிப் பயன்பாட்டை செம்மையாக்கிக்கொள்ள உதவும் எனலாம். ஈமச் சின்னம் என்பது சவ அடக்கமுறையோடு தொடர்புடைய சின்னமாகும். அதாவது, இச்சின்னங்கள் நீத்தோரின் எலும்புகள், இடுபொருட்கள் கொண்டு எழுப்பப்படுபவை ஆகும். நினைவுச் சின்னம் என்பது சவ அடக்கமுறையோடு தொடர்பற்ற வெறும் ஞாபகச் சின்னமாகும்.

தோற்றத்தில் அல்லது புற அமைப்பில், இந்தியச் சின்னங்களுக்கும் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள சின்னங்களுக்கும் உருவ ஒற்றுமை காணப்பட்டாலும், எழுப்பப்படும் நோக்கத்தில் வேற்றுமை கொண்டவையாக உள்ளன. தென்கிழக்கு ஆசியப் பகுதி சின்னங்கள், ஈமக்கிரியையோடு கூடிய சவ அடக்க முறைகளோடு தொடர்பற்ற நினைவுச் சின்னங்களே ஆகும். இந்தியாவில் காணப்படும், குறிப்பாக தென்னிந்தியச் சின்னங்கள் முழுமுற்றாக ஈமக்கிரியையோடு கூடிய சவ அடக்க முறைகளோடு கூடிய நினைவுச் சின்னங்கள் ஆகும் (V.D. Krishnasamy, Megalithic Types of South India, in Ancient India, vol-5, pp.35-45).

Story image

(கல் திட்டை- Dolmen)

மேலும், தென்னிந்திய ஈமச்சின்னங்களும் பிற இந்தியப் பகுதிகளில் உள்ளவையும் தோற்ற ஒற்றுமை கடந்து நுட்பமான வேறுபாட்டுடன் விளங்குகின்றன. இந்த வேற்றுமையே, இவை வெவ்வேறு பாரம்பரியத்தைச் சார்ந்தவை என்பதைக் காட்டுகின்றன என்பர். வட இந்தியச் சின்னங்களுடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட மட்பாண்டங்கள், குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் எண்ணிக்கை மிகக் குறைந்தே காணப்படுவதோடு, இவை பெரும்பாலும் உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் இவை பெருமளவுக்குப் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துப் புதைக்கப்பட்டிருக்கின்றன. சில தென்னிந்திய ஈமச்சின்னங்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மட்பாண்டங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வேறுபாடு, இரும்புக் கருவிகளிலும் உள்ளது. வட இந்தியாவில், இரும்புக் கருவிகள் அரிதாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் உள்ளன. சில தென்னிந்தியச் சின்னங்களில் இருந்து முப்பத்திரண்டு வகைக்கு மேற்பட்ட இரும்பு ஆயுதங்கள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வேறுபாட்டுடன், குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேறுபாடும் காணப்படுகிறது. தென்னிந்தியாவைத் தவிர்த்த பிற இந்தியப் பகுதிகளில் உள்ள ஈமச் சின்னங்களில் மனிதன், விலங்கு உட்பட எலும்புகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இங்கு, இறந்தவர்களைத் எரியூட்டிய பின்னர் எஞ்சிய எலும்புகளைச் சேகரித்து அடக்கம் செய்து ஈமச்சின்னங்களை எழுப்பியுள்ளனர். சில சமயங்களில், இறந்தவர் உடலை மிருகங்கள், பறவைகள் போன்றவை உண்ட பின்னர், மிகுதியைச் சேகரித்து அடக்கம் செய்யப்பட்டவையாகவும் உள்ளன.

தென்னிந்தியா தவிர பிற பகுதிகளில், ஈமக்குழிகளில் மிருகங்களின் எலும்புகளின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகின்றன. ஆனால், தென்னிந்திய ஈமச்சின்னங்களில் இவை மிகுந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில், இறந்தவர்களின் உடலை அப்படியே புதைக்கவில்லை. இறந்தவர் உடல் பல நாட்களுக்கு வசிப்பிடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து மிருகங்கள், பறவைகள் போன்றவை சதைப் பகுதிகளை உண்ட பிறகு மிஞ்சிய எழும்புகளை, முக்கியமாக மண்டை ஓடு, கை, கால் எலும்புகளை சேகரித்து, ஈமச்சின்னங்களில் வைத்து அடக்கம் செய்யும் மரபு வழக்கில் இருந்தமையை அறியமுடிகிறது. (இம்மரபு குறித்து முந்தைய அத்தியாயத்திலும் சிறிது விளக்கப்பட்டுள்ளது. காண்க)

இவ்வாறு, இறந்தவர் உடல் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உணவாக வைக்கப்படும் காலங்களில், மிருகங்கள் மனித எலும்புகள் சிலவற்றை சதையுடன் இழுத்துச் செல்ல வாய்ப்புகள் மிகுதியாக இருக்கும் என்பதால், தென்னிந்திய ஈமச்சின்னங்களில் மனிதனின் முழு எலும்புக்கூடுகள் கிடைக்கப் பெறுவதில்லை. அல்லது அரிதாகவே காணமுடிகிறது.

இவ்வாறு, இந்தியாவில் உள்ள பெருங் கற்படைச் சின்னங்கள் புறத்தோற்றத்தில் ஒற்றுமை உடையவையாக இருந்தாலும், அடக்க முறையிலும், இடுபொருட்களின் தன்மையிலும் தென்னிந்தியச் சின்னங்கள் தனித்தன்மையுடன் விளங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

அண்மைக்கால ஆய்வுகளின் முடிவுகள்

பெருங் கற்படைச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் இவற்றின் தோற்றம், வளர்ச்சி, பரவல் பற்றிய பல புதிய அறிதல்களை வெளிப்படுத்தியுள்ளன. இவற்றுள் மிகமுக்கியமானது, புதிய கற்காலத்துக்கும் பெருங் கற்படைக் காலத்துக்கும் இடையில் நிலவிய தொடர்ச்சி பற்றியது ஆகும். பெருங் கற்படைப் பண்பாட்டில், ஈம அடக்கமுறைகளில் வழக்குப்பட்டிருந்த குழிகளில் அடக்கம் செய்தல், நீளக்கிடத்தி அடக்கம் செய்தல், தாழிகளில் அடக்கம் செய்தல் என்பன புதிய கற்காலத்திலேயே தோன்றிவிட்டனவாகும். எனில், இவற்றில் ஒரு ஒற்றுமையின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. இவ்வாறே இறந்தவர்களை அடக்கம் செய்தபின்னர், அடக்கம் செய்த இடத்தில் நினைவாகவோ, அடையாளமாகவோ கற்களை வைக்கும் வழக்கமும் உருவாகியிருந்தமையை அறிய முடிகிறது. இவ்வாறு கல் வைக்கப்பட்ட மரபிலிருந்து வளர்ந்த மரபே, பெருங் கற்படைக் காலத்தில் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட பலவகையான ஈமச்சின்னங்களாக வளர்ச்சியடைந்தன எனலாம். இந்த அறிதல், பெருங் கற்படைப் பண்பாடு வெளியில் இருந்து இந்தியா புகுந்த ஒரு புதிய மக்கள் கூட்டத்தினரால் உருவானது என்ற முந்தைய முடிவுகளை மாற்றியமைத்துள்ளது.

தென்னிந்தியாவில், வழிவழியாக வாழ்ந்து வந்த புதிய கற்கால மக்களின் வாழ்க்கையின் தொடர்ச்சியே பெருங் கற்படைக் கால மக்களின் வாழ்வு என்பது உறுதியானது. இதனால், புதிய கற்கால மக்கள் அக்காலத்தில் வெளியுலகுடன் கொண்டிருந்த தொடர்பினால், பலவகை ஈமச்சின்னங்களை அமைக்கும் மரபை, தாம் ஏற்கெனவே போற்றி வந்த மரபுகளோடு வளர்த்தெடுத்துள்ளனர் என்ற முடிவை எட்டவைக்கிறது. பெருங் கற்படைக் காலத்தில் ஏற்பட்ட சமூக வளர்ச்சி, வாய்ப்புகள், நம்பிக்கைகள் ஆகியவை, இத்தகைய பெருங் கற்படைச் சின்னங்களை அமைப்பதற்கான சூழலை உருவாக்கின.

Story image

(குத்துக்கல் வரிசை (அ) கல்வரிசை - Menhir - Stone Alignment)

தென்னிந்தியர்கள் கற்களைக் கொண்டு பலவகைச் சின்னங்களை அமைக்கும் மரபை பினீசியர்களிடம் இருந்து கற்றனர் என்றும், தென்னிந்தியாவில் காணப்படும் கல்லறை வகைச் சின்னங்கள், இடுதுளையுடைய கல்லறைச் சின்னங்கள் மத்திய தரைக்கடல், அரேபியப் பகுதி செல்வாக்கையும், ஈமப்பேழை போன்றவை பண்டைய மெசபடோமியா, பாரசீகப் பகுதிகளின் செல்வாக்கையும், கால்களையுடைய தாழிகள், குடைவரைக் குகைகள் போன்றவை யேமன் பகுதி செல்வாக்கையும் காட்டுபவையாக உள்ளன. இந்தவகையில், வெளியில் இருந்து வந்த செல்வாக்கே தென்னிந்தியாவில் பலவகையான ஈமச்சின்னங்களை அமைக்க வழியமைத்தது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளன. (Allchin. B and Allchin F.R, The Birth of Indian Civilization, Harmondsworth, 1968).

தென்னிந்தியா, மு.பொ.ஆ. 4000 முற்பட்ட காலங்களில் இருந்தே உலகின் பண்டைய நாகரிகங்கள் நிலவியிருந்த நாடுகளுடன், குறிப்பாக சுமேரியா, எகிப்து, அசிரியா, யூதர், அரேபியப் பகுதிகள், கிரேக்கம் ஆகிய நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பினை குறிப்பாக வாணிகத் தொடர்பினை, “யுத்தபூமி அத்தியாயம் 4-ல்” விளக்கப்பட்டுள்ளது. இதனுடன், இப்பண்பாட்டின் வளர்ச்சிக்கு இத்தொடர்புகள் ஏற்படுத்திய சிந்தனையும் இணைத்துப் பார்க்கத்தக்கதாகும்.                                          

அகழாய்வுகள் தரும் வெளிச்சம்

அகழாய்வுகளே புதிய முடிவுகளை நமக்கு வழங்கியுள்ளன. அறிவியல் வயப்பட்ட தற்கால அகழாய்வுகள், மேலும் நுட்பமான முடிவுகளை வழங்கிவருகின்றன. 1945-ம் ஆண்டுக்கு முன், அரிக்கமேட்டில் மார்ட்டிமர் வீலர் (Wheeler. R.E.M) மேற்கொண்ட அகழாய்வுகள் அறிவியல் முறையில் அமைந்தது என்று சொல்ல முடியாது. மண்ணடுக்கியல் (Stratigraphy) பற்றி கவனத்தில் கொள்ளாத அவ்வாய்வுகள், அகழ்வுகளில் கிடைத்த பொருட்களை பட்டியல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தியதாக உள்ளது. வீலரால் இன்றைய கர்நாடகத்தில் உள்ள பிரம்மகிரியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, புதிய கற்கால, பெருங் கற்கால, வரலாற்றுக் காலத்தின் சான்றுகள் ஒன்றை அடுத்து ஒன்று மூன்று மண்ணடுக்குகளில் காணப்பட்டமை, புதிய கற்காலத்தை அடுத்தே பெருங் கற்காலமும் அதற்கு அடுத்தே வரலாற்றுக் காலமும் தென்னிந்தியாவில் உருவாயின என்ற உண்மையை எடுத்துரைத்தது. இவ்வாய்வே, அதுவரை இப்பண்பாடுகளின் காலநிலை குறித்து நிலவிவந்த தெளிவற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Story image

(கல்குவை - Cairn)

தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களின் வகைகள் மற்றும் கட்டடக் கலை பற்றிய ஆய்வு, 1823-ம் ஆண்டு பாபிங்டன் (Babinton. J) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையிலான அறிதல்களை அறிமுகம் கொள்வது, சற்றேரக்குறைய 200 ஆண்டுகளில் என்னென்ன முன்னேற்றங்கள் மற்றும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.

“பண்டுக்குழிகள்” (பாண்டுக்குழிகள்! – Pandoocoolies) என்று கேரள மாநிலத்தில் உள்ள ஈமச்சின்னங்களை விவரித்து, 1823-ல் பாபிங்டன் எழுதினார். பிரிக்ஸ் (Breeks), தமிழகத்தில் நீலகிரிப் பகுதிகளில் வாழும் தோடர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நீத்தோருக்கு மேற்கொண்ட ஈமக்கடன்களை ஆய்ந்து பழங்குடி மரபுகளுக்கும் பெருங் கற்படைச் சின்னங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்து விவரித்துள்ளார். பெருங் கற்படைகள் குறித்த இவரது ஆய்வு முடிவுகள், இவருக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போக்குகளில் இருந்து வேறுபட்டதாகவும், இப்பண்பாட்டில் ஒரு இந்தியத்தன்மையை அடையாளம் காணும் முதல் முயற்சியாகவும் இருந்தது. 1862-ம் ஆண்டு, அன்றைய நிஜாம் ஆளுகையின் கீழ் இருந்த ஹைதராபாத் மாகாணத்தில் இருந்த ஈமச்சின்னங்கள் குறித்து மெடோவ் டைலர் (M. Taylor) எழுதினார். 1872-ல், பெர்குசன் என்பவர் “எல்லா நாடுகளில் உள்ள ஈமச்சின்னங்களும் அவற்றின் காலமும் பயனும்” என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார்.

பிரிக்ஸ் அவர்களின் ஆய்வு துவக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக இருப்பினும், இப்பண்பாடு குறித்த ஆய்வுகளின் போக்குக்கு ஒரு மையப்புள்ளியாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இவருக்கு முன் ஆராய்ந்தோர், இப்பண்பாட்டை உருவாக்கியவர்கள் சீத்தியர் போன்ற ஐரோப்பிய மேற்காசியப் பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய மக்கள் கூட்டத்தினர் எனக்காட்டி, வெளியில் இருந்தே இப்பண்பாட்டை இந்தியாவில் புகுத்தினர் என்ற கருத்துருவங்களை வெளிப்படுத்தியிருந்தனர். பிரிக்ஸ் மட்டும்தான், இந்தியப் பூர்வகுடி மக்களாலேயே இவை எழுப்பப்பட்டன என்ற முடிவை முன்வைத்தார்.

Story image

(குத்துக்கல் வரிசை (அ) கல்வரிசை  - Stone row or Stone Alignment)

இப்பண்பாடு இந்தியப் பூர்வகுடிகளால் உருவானது என்ற தெளிவு ஏற்பட்டதும், இப்பண்பாட்டின் தோற்றம் பற்றியும் இதை உருவாக்கிய மக்கள் பற்றியும் பல்வேறு கருத்துகளை, தொல்லியல் பின்னணியை அறியாத அறிஞர்கள் கொண்டிருந்தனர். (சி.க. சிற்றம்பலம், பண்டைய தமிழகம், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, 1999, ப.97) அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை -  

1. இன்றைய பெளத்த, சமண, இந்து மதங்களைப் பேணுவோரின் சின்னங்கள்.

2. தற்காலப் பழங்குடி மக்களது மூதாதையரது சின்னங்கள்.

3. மொழி, இனம் தெரியாத, மறைந்த ஓர் இனத்தின் சின்னங்கள்.

4. ஆரிய மொழியைப் பேசியோரின் சின்னங்கள்.

5. சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்களின் சின்னங்கள்.

நாட்டுப்புற வழக்குகளும் பெயர் வழக்குகளும்

இச்சின்னங்கள் குறித்து நாட்டுப்புற வழக்கில் மக்களிடையே பல்வேறு கதைகளும் கருத்துருவங்களும் வழக்கில் உள்ளன.

1. தமிழகத்தின் வடபகுதியில், இச்சின்னங்கள் “பாண்டவர் குழி”, “பாண்டவர் குட்டை”, “பாண்டவர் வீடு” என்று அழைக்கப்படுவதுடன், இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்துடனும், பாண்டவர்களுடனும் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. அதன்படி, “பாண்டவர்கள் தம் வனவாசக் காலத்தில் இங்கு தங்கினர் என்றும் அதன் காரணமாகவே அவர்கள் நினைவில் பாண்டவர் வீடு என்று அழைக்கப்படுகிறது”. தற்கால சொல்லாய்வுகள், “மாண்டவர் குட்டை”, “மாண்டவர் குழி”, ‘மாண்டவர் வீடு’ என்பனவற்றின் திரிபுகளே ‘பாண்டவர் குட்டை’, “பாண்டவர் குழி”, “பாண்டவர் வீடு” என்றாகியுள்ளன என்பதை தெரிவிக்கின்றன.

2. “அக்காலத்தில் பாண்டவர்கள் எனப்படுபவர்கள் குட்டையான உருவம் கொண்டவர்கள். இவர்கள் நிலவறையைப் போன்ற வீடுகளை பூமியின் கீழ்ப்பகுதியில் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். ஒருநாள் தங்கம் மழையாக வந்ததால், அனைவரும் அதைச் சேகரிக்க முற்பட்டபோது, திடீரென்று மழை பெய்து அவர்களை முழுமையாக அழித்துவிட்டது, அவர்கள் கட்டிய நிலவறை வீடுகள் மட்டும் அழியாமல் உள்ளன” என்பதை கள ஆய்வுக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.  (தி. சுப்பிரமணியன், தமிழகத் தொல்லியலும் வரலாறும் (தகடூர்ப் பகுதி) நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2009, ப.62).

இவற்றுடன் “நரிவங்கு”, “நரிவீடு”, “லம்பாடி இரும்பு”, “எடுத்து வச்சான் கல்” போன்ற பல பெயர்களும் வழக்கில் உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் சின்னம், “கல்பதுக்கை” வகையினத்தைச் சேர்ந்தது என்று அறியமுடிகிறது.

3. இச்சின்னங்களை சுட்ட, “வாலியர் இருப்பு” மற்றும் “வாலியர் வீடு” என்ற பெயர்கள் வட ஆர்க்காடு மாவட்டத்தில் நாட்டு வழக்கில் உள்ளன. மேலும், இவை மற்றொரு இதிகாசமான ராமாயணத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. “இலக்குமணன் மயக்கமுற்று இருந்தபோது, மூலிகை மலையான சஞ்சீவி மலையை அனுமன் பெயர்த்து வானத்தில் எடுத்துச் சென்றபோது, அதிலிருந்து விழுந்த கற்களின் குவியல்தான் இவை என்றும், அதில் வாலியர் எனப்படும் குட்டையான உருவம் கொண்டவர்கள் வாழ்ந்தார்கள்” என்று அக்குறிப்பு விரிகிறது (தி. சுப்பிரமணியன், மேலது.) இங்கு குறிப்பிடப்படும் சின்னம் “கல்திட்டை” மற்றும் “கல்லறை போன்ற கல்திட்டை” வகையினத்தைச் சேர்ந்தது என்று அறியமுடிகிறது.

4. “முதுமக்கள் தாழி”யும் பல பெயர்வழக்குகளைப் பெற்றுள்ளதை அறியமுடிகிறது. தென் ஆர்க்காடு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இவை “மதமதக்கா சால்” என்று வழக்குப்பட்டுள்ளன. பொதுவாக, இது முதுமக்கள் தாழி என்பதின் திரிபு வழக்கு என்று கருதப்படுகிறது. இதில், முதுமக்கள் என்பது மதமதக்கா என திரிபடைய வாய்ப்பு உள்ளது. தாழி என்பது சால் என திரிபடைய வாய்ப்புகள் குறைவு. மேலும், “சால்” என்பது மட்பாண்ட வகைகளுள் ஒன்று ஆகும். இது பெரும்பாலும் தானியங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவதாகும். இவை பல அளவுகளில் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுபவை. இங்கு, தாழி மிகப்பெரிய சால் எனக்கொள்ளப்பட்டுள்ளது என எண்ணல் தகும்.

தாழி என்ற சொல் தாழ்தல் என்ற சொல்லடியாகப் பிறந்தது. இதற்கு பூமிக்குக் கீழ் புதைத்தல் என்று பொருள்கொள்வர்.    

5. “குரங்குப் பட்டடை” என்ற பெயர், புதுக்கோட்டை பகுதியில் வழக்குப்பட்டுள்ளது. இதற்கு, “குரங்கின் தொழிற்கூடம்” என்று நேரடிப்பொருள் பொருந்துவதாக இல்லை. இச்சொல் குறித்து ஆய்வு செய்த கே.ஆர். சீனிவாசன், “நார்த்தாமலையில் உள்ள பொ.ஆ. 13-ம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று, கோயிலுக்கு வழங்கிய நிலத்தானம் பற்றி குறிப்பிடும்போது, நில அளவைக் குறிக்க “குரங்குப் பட்டடை” என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது. எனில், இச்சொல் 13-ம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்துவருவதை அறியமுடிகிறது. மேலும் அவர், குரங்குப் பட்டடை என்பது “குரக்குப் படை” என்பதின் திரிபு எனக் காண்கிறார். “குரக்கு” என்றால் மண்ணைத் “தோண்டுதல்”. நிலத்துக்குக் கீழ் “தாழ்தல்” என்று பொருள்படும் என்றும் “படை” என்பது “படுக்கை” என்பதில் இருந்து வந்தது என்றும், “படு” என்பதின் திரிபு என்றும் சுட்டிக்காட்டுகிறார். சோழர் காலத்தில் மன்னர்களுக்கு எடுக்கப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்பார். படை என்பது “படு, படை, அடை” என்பவை போல், படுத்திருத்தல், அடக்கம் செய்தல் என்ற பொருளில் வந்துள்ளது என்பார். எனில், “குரங்குப் படை” என்பது பள்ளிப் படையைப்போல, பூமியைத் தோண்டி எடுக்கப்படும் அறை என்ற பொருளைப் பெற்றதாகும். இது மருவி, குரங்குப் பட்டடை என ஆகியுள்ளது என்றும் கூறுகிறார். (K.R. Srinivasan, ‘The Megalithic burial and Urn burials of South India in light of Tamil Literature and Tradition, Essay in Ancient India, Voll-ii, pp.6-7).

இங்கு ஆய்வு செய்யப்பட்ட பெருங் கற்படைச் சின்னமும் கல்பதுக்கை வகையினத்தைச் சார்ந்ததாகும்.

6. “பாண்டக்குழி”, “பாண்டியர்குழி” என்பவை, கொங்குப் பகுதியில் வழக்கில் உள்ள சொற்களாகும். இவை “மாண்டவர் குழி” என்பதன் திரிபுகளாக உள்ளன. இங்கு குழி என்பது “புதைக்குழி” என்ற சொல்லில் உள்ள குழியின் பொருளைப் பெற்றிருக்கிறது. குழியில் இடுதல், குழியில் புதைத்தல் என்பவை, “அடக்கம்” செயலைக் குறிப்பவை ஆகும்.    

7. “மோரியர் மனா” என்ற வழக்கு இன்றைய கர்நாடகாவிலும், அதன் எல்லையில் அமைந்த தருமபுரி மாவட்டப் பகுதிகளில் உள்ளது. “மனே” என்பது “மனை” என்ற தமிழ்ச் சொல்லின் கன்னட மொழித் திரிபாகும். மனேவின் திரிபாக ‘மனா’ உள்ளது. மோரியர் என்பது மகத நாட்டினரைக் குறிப்பது. சங்க இலக்கியமும் மோரியர் என்றே குறிப்பிடுகிறது. எனினும், மக்கள் வழக்கில் இது வடநாட்டவர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல்லாக உள்ளது. வடநாட்டைச் சார்ந்தவர்கள் வாழ்ந்த இடம் என்று பொருள்பட குறிப்பிடுகின்றனர்.

8. “இராச்சா கொலு” என்ற வழக்கும் “கோலி” என்ற வழக்கும் ஆந்திரப் பகுதியில் உள்ளன. இதற்கு அரக்கர் எனப்படும் இராச்சசர்களின் மயான இடம் என்று பொருள் கூறப்படுகிறது. இவை “இராச்சா குழி” மற்றும் “குழி” என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே எனக்கொள்ளலாம். “குழிசி” என்பது பானையைக் குறிக்கும் சொல்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. மேலும் “கோலிளகுதல்” என்ற வழக்கு, வீரச்செயலில் அரசனின் இறப்பைக் குறிப்பதையும்; “கோலிவருதல்” என்பது சுற்றிவருதல் என்றும் பொருள் கொள்ளப்படுவதை நினைவுகொள்ளலாம். சுற்றிவருதல் என்பது வணங்குதல் செயலைக் குறிப்பாகும். எனில், இராச்சா குழி, இராச்சா கொலி என்ற சொற்கள் மேலாய்வை வேண்டுகின்றன எனலாம்.

9. “ஈமக்காடு”. “சுடுகாடு”, “பெருங்காடு”, “தாழிக்காடு” என்பவை, பெருங் கற்படைச் சின்னங்கள் நிறைந்து காணப்படும் இடங்களுக்கு வழக்கில் உள்ள பெயர்களாகும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஈமச்சின்னங்கள் உள்ள இடங்கள் “செத்தகுட்டை”, “செத்தகாடு”, “பாண்டவர் பண்டா”, “பாண்டவர் குட்டை” முதலிய சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.

கல்வெட்டுச் சொற்கள்

கல்வெட்டில் இடம்பெற்ற “குரங்குப் பட்டடை” சொல் குறித்து முன்னர் விளக்கம் காணப்பட்டது. “கற்கிடை” என்ற சொல், சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளன (SII.Vol-II, part-1, p.54). ஊர்ப்பகுதிகளைக் குறிக்கும்போது, கல்கிடை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லைப் பொருள்கொள்வதில் துவக்கத்தில் முரண்பாடுகள் இருந்தன. இது, “வெள்ளாளர் அல்லது பறையர்களின் சுடுகாடு” என்று பொருள்கொள்ளப்பட்டது (K.V. Subramaniya Iyar, Historical Sketches of Ancient Deccan, 1967, p.259). ஆனால், இதனை கல்பதுக்கை வகையினமாகக் காணலாம். கற்கிடை என்பது வழிவழியாக வழக்கில் இருந்த சொல் என்பதால், இடுகாடு, சுடுகாடு போன்ற சொற்களோடு அதே பொருளில் கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.

Story image

(கல்வட்டம் - Stone Circle)

இலக்கியப் பெயர்கள்

சங்க இலக்கியத்தில் தாழி, கற்பதுக்கை, பரல் உயர் பதுக்கை, பரலுடை மருக்கின் பதுக்கை, நெடுநிலைக்கல், நெடுங்கல் மற்றும் நடுகல் முதலிய பெயர்களில் பெருங் கற்படைச் சின்னங்கள் விவரிக்கப்படுகின்றன. இவ்வகைகள் குறித்து அடுத்து வரும் அத்தியாயங்களில் விளக்கப்படும்   

முன் பெயர் சூட்டல்கள்

பெருங் கற்படைச் சின்னங்களுக்கு இடப்பட்ட முந்தைய பெயர்கள், ஒரு பொதுச் சுட்டலில் இருந்து எவ்வாறெல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பொ.ஆ. 1848-ல், டெய்லர் (Taylor) என்பவர், பெருங் கற்படைச் சின்னங்களுக்கு “குத்துக்கல் வட்டம்” என்று பெயரிட்டார். இக்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்ட எல்லா வகையான பெருங் கற்படைச் சின்னங்களும் “கல்வட்டம்” என்ற பெயரால் குறிப்பிடப்பட்டன. இதனை, பிரிக்ஸ் (Breeks) குறிப்புகளில் இருந்தும், பொ.ஆ. 1876-ல் ஆதிச்சநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜாகர் (Jager) குறிப்புகளில் இருந்தும், பொ.ஆ. 1882-ல் ராபர்ட் சீவல் தயாரித்த தொல்பொருட்களின் விவரப் பட்டியலில் இருந்தும், பொ.ஆ. 1901-ல் ராபர்ட் புரூஸ்புட் தயாரித்த தொல்பொருட்களின் விவரப் பட்டியலில் இருந்தும், அலெக்சாண்தர் ரே-வின் குறிப்புகளில் இருந்தும் அறியமுடிகிறது. இவை அனைத்தும், “கல்வட்டம்” என்ற பொதுச் சுட்டையே கொண்டிருக்கின்றன.

எல்லா வகைச் சின்னங்களுக்கும் கல்வட்டம் என்ற பெயர் வைப்பின் குறைபாடுகளும், போதாமையும் சிறிது காலத்திலேயே உணரப்பட்டன. குத்துக்கல் என்ற பொதுப்பெயர், உயரமாக எழுப்பப்பட்ட கற்குவைகளுக்கும், பரல் உயர் பதுக்கைகள் என்ற கற்குவி கல்வட்டங்களுக்கும் வைக்கப்பட்டன. கல்வட்டங்களில் உள்ள கற்கள் சில உயரமாகவும், சில குட்டையாகவும் இருப்பது கொண்டும், குத்துக்கல் வகையினம் தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்பெயர் வைப்பின் குறைபாடு ஆய்வாளர்களால் உணரப்பட்டது. பொ.ஆ. 1938-ல் கிளர்க் மற்றும் டேனியல் ஆகியோர், பல்வேறு பகுதிகளில் காணப்படும் வெவ்வேறு வகையான பெருங் கற்படைச் சின்னங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதன் விளைவாக, பெருங் கற்படைச் சின்னங்களின் வகையினங்கள் பிரதேச வாரியாக தொகுக்கப்பட்டு பெயரிடப்பட்டன.

செங்கல்பட்டு பகுதியில் காணப்படுபவை, கல்திட்டை வகையில் கால்களுடன் கூடிய பேழையை உடைய பெருங் கற்படைச் சின்னம் என்றும், கேரள மாநிலத்தில் கொச்சி பகுதியில் உள்ளவை தொப்பிக்கல், கல்லறை, குடைவறை என்றும் வகைப்படுத்தப்பட்டன. புதுச்சேரியில் உள்ளவை கல்திட்டை மற்றும் கல்வட்டம் என இருவகையாக வகைப்படுத்தப்பட்டன. இப்பின்னணியில், பொ.ஆ. 1949-ல் வி.டி. கிருஷ்ணசாமி, பெருங் கற்படைச் சின்னங்களை முறையாக ஆய்ந்து வகைப்படுத்தி புதிய சுட்டுப்பெயர்களை வெளியிட்டார். (V.D. Krishnasamy, in Ancient India Vol-5, 1953, pp.36-37). அக்காலத்தில் அறியப்பட்ட சின்னங்களுக்கு இப்பெயர் சுட்டுமுறைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருந்தன. பின்னரும், பெருங் கற்படைச் சின்னங்களுக்குப் பெயர் வைப்பு முறைகள் தொடர்ந்தன.

Story image

(கல்வட்டம் - Stone Circle)

கிருஷ்ணசாமி, பேனர்ஜி, செளந்தரராஜன், சீனிவாசன் ஆகியோரால் தமிழகத்தில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன (K.S. Ramachandran, Archaeology of South India - Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980). பி. நரசிம்மய்யா அவர்கள் தமிழகப் பெருங் கற்படைச் சின்னங்கள் குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார் (B. Narashimmaiah, Neolithic and Megalithic Culture in Tamil Nadu, Sundeep Prakasjan, Delhi, 1980). பின்னர் கா. ராஜன் அவர்கள், மாவட்டம் வாரியாக இச்சின்னங்கள் குறித்து விரிவாக ஆய்ந்துள்ளார். (K. Rajan, 1. Archaeological Gazeeter of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur, 1997, 2. Cataloguge of Archaeological Sites in Tamil Nadu, Heritage India Trust, Thanjavur, 2009)

இவர்களது ஆய்வுகள், பெருங் கற்படைச் சின்னங்களின் புறத்தோற்றத்தையும் அகக்கட்டுமானத்தையும் கவனத்தில் கொண்டு புதிய வடிவமைப்புகளையும், கட்டடத் தொழில்நுட்பங்களையும் அடையாளப்படுத்தின. பொ.ஆ. 2010-ல் த. பார்த்திபனால் (‘யுத்தபூமி’ தொடர் ஆசிரியர்) பெருங் கற்படைச் சின்னங்கள், முதன்முதலாக முதன்மைக்கூறு அல்லது தனிநிலை ஈமச்சின்னங்கள் மற்றும் கூட்டுவடிவ ஈமச்சின்னங்கள் என்று இரு வகையாக வகைப்படுத்தி, பெருங் கற்படைச் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. (த. பார்த்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு - சங்ககாலம், ஸ்ரீ விவேகாந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி, 2010 & தொன்மைத் தடயங்கள் ஓர் அறிமுகம், தொகுதி - 1, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர், 2010).

இந்த இரு வகைப்பாடுகளில் உள்ள பலவகையான பெருங் கற்படைச் சின்னங்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் விளக்கப்படும்.

(தொடரும்)

குறிப்பு

இந்த அத்தியாயத்தில் வெளியிடப்பட்ட பெருங் கற்படைச் சின்னங்களின் புகைப்படங்கள், உலகின் பிற நாடுகளில் காணப்படுபவை. இவை, தென்னிந்தியச் சின்னங்களுடன் கொண்டுள்ள புறத்தோற்ற ஒற்றுமையை அறிய வெளியிடப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.