தமிழரின் இச் சிறப்புப் பண்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்தொன்று, மிகச் சரியாக அதனை அடையாளப்படுத்துகிறது. “கட்டடக் கலையின் பல்வேறு நுணுக்கங்களை அறிந்திருந்தபோதிலும், தமிழர் தமக்கென ஆடம்பரமான மாளிகைகளை எழுப்பிக்கொள்ளவில்லை. இது, சமகாலச் சமூகத்தின் பிரதிபலிப்பாக அல்லது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இந்நிலைதான், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் நிலவியது எனலாம். மாபெரும் கோயில்களை உருவாக்கிய பிற்கால மன்னர்களான பல்லவர்களோ, பாண்டியர்களோ, சோழர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் இருப்பதுபோல் அல்லாமல், தமக்கென கல்லால் ஆன எவ்வித அரண்மனைகளையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே, இப் பெரும் சின்னங்கள், அக்கால மக்கள் தமது மூத்தோரின் மீது வைத்திருந்த பற்றுதலையும் ஈடுபாட்டையும் காட்டுகின்றன” (கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், 2004, ப.22). இங்கு, இந்தியாவின் பிற பகுதி மட்டுமல்ல, உலகின் பிற எந்தப் பகுதியில் இருப்பதில் இருந்தும் தமிழர் பண்பாடு வித்தியாசப்பட்டு நிற்கிறது என்று குறிப்பிடலாம்.