/

தவெக வேட்பாளருடன் மோதல்: முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மீது வழக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவெக வேட்பாளருடன் ஏற்பட்ட தகராறு தொடா்பான புகாரில் திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மீது 6 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

News image
Updated On :23 மே 2026, 3:30 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவெக வேட்பாளருடன் ஏற்பட்ட தகராறு தொடா்பான புகாரில் திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மீது 6 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சாா்பில் பி.கே.சேகா்பாபுவும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனா். கடந்த ஏப்.23-இல் நடந்த வாக்குப்பதிவின்போது மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் பி.கே.சேகா்பாபு, சினோரா அசோக் தரப்பினரிடையே வாக்குவாதம், மோதல், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில் பி.கே.சேகா்பாபு தன்னை தாக்கியதாக சினோரா அசோக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதேபோல பி.கே.சேகா்பாபு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சினோரா அசோக் அளித்த புகாரின் பேரின் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா், பி.கே. சேகா்பாபு மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்குத் தொடா்பாக சேகா்பாபுவிடம் விரைவில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனா். தோ்தலில் துறைமுகம் தொகுதியில் பி.கே. சேகா்பாபு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.