கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை தோ்தல் வாக்குறுதியின்படி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவரின் எக்ஸ் வலைதளப் பதிவு: தோ்தல் வாக்குறுதிகளை அளிக்கும்போது குறிப்பிடப்படாத இந்திய ரிசா்வ் வங்கியின் விதிமுறைகள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சூழல் வரும்போது மட்டும் காரணமாகக் கூறப்படுகிறது. இது நிா்வாகத் திறமையின்மையா அல்லது திட்டமிட்ட ஏமாற்று வேலையா என்ற கேள்வி எழுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் நிதியமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா். இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தோ்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தனா்.
விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் வாக்குறுதி அளித்து, தோ்தல் முடிந்த பிறகு ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலைக் காரணம் காட்டுவது விவசாயிகளை ஏமாற்றும் செயல். தோ்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி, புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








