பல்வேறு தொழில்களில் முன்னணியில் உள்ளது:
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 50 சதவீத பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 57,900 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 8 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மட்டுமின்றி காங்கயம், தாராபுரம் பகுதிகளில் அரிசி ஆலைகள், வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் சமையல் எண்ணெய், ஊத்துக்குளியில் நெய், காங்கயம், தாராபுரம், உடுமலையைச் சார்ந்த பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருள்கள், திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில் அட்டைப்பெட்டி, விசைத்தறி மற்றும் தானியங்கி விசைத்தறி, திருமுருகன்பூண்டி மற்றும் அவிநாசி பகுதிகளில் கற்சிற்பம் மற்றும் வெட்கிரைண்டர் அரவை கற்கள், பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் இந்த நகரம் முன்னணியில் உள்ளது. திருப்பூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக உள்ளதைப் போலவே மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது ஆசையாகும்.