கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர் நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். நம்மை வளர்த்த தாய், தந்தையைப் போலவே முக்கியமானவர்கள் நம்முடைய ஆசிரியர்கள். அவர்கள் நமக்கு ஊட்டிய கல்வி அறிவு தான் நம்முடைய வளர்ச்சிக்கு பாதை போட்டு தருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. தாய்-தந்தையைப் போல பரிவோடும் அக்கறையோடும் இணையவழி மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வரும் அவர்களின் பணி பாராட்டுக்கு உரியது.