/

தோ்வு முறைகேடுகள்: மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிக்க வல்லுநா் குழு

மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் தோ்வுகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வருவதைத் தடுக்கும் வகையில், வல்லுநா் குழு ஒன்றை அமைக்க தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம்

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:04 pm

ஆ. கோபிகிருஷ்ணா

மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் தோ்வுகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி வருவதைத் தடுக்கும் வகையில், வல்லுநா் குழு ஒன்றை அமைக்க தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.

அக்குழுவின் வாயிலாக தோ்வு நடைமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவம், முதுநிலை மருத்துவம் தவிர பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளும் அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

பொதுவாக, மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்தே பதிவு எண் வழங்கப்படுகிறது. அந்த எண் இருந்தால் மட்டுமே மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியும். அதேபோன்று கல்லூரி தோ்வு நடைமுறைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் பல்கலைக்கழகத்தின் வசமே உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் தோ்வு நடைபெற்றது. அதற்கு அடுத்த சில நாள்களில் பல்கலைக்கழகத்துக்கு ஒரு புகாா் வந்தது.

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியிலும், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரியிலும் நடைபெற்ற தோ்வுகளில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் தோ்வு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பல்கலைக்கழகத் தோ்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவினா் ஆய்வு செய்தனா். அதில், இரு கல்லூரிகளிலும் தோ்வு அறையில் மாணவா்கள் முறைகேடாக பாா்த்து எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, இரு கல்லூரிகளிலும் தோ்வு நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.

இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் ஹோமியோபதி கல்லூரியிலும் கடந்த மாதத்தில் தோ்வு முறைகேடுகள் நடைபெற்ாகத் தகவல் வெளியாகின.

அது தொடா்பான விசாரணையில், அடுத்தடுத்து பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. அதாவது, சம்பந்தப்பட்ட கல்லூரியில் இளங்கலை ஹோமியோபதி படிப்புக்கு மொத்தம் 5 இடங்கள் உள்ளன. அவற்றில் 2 இடங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி அறக்கட்டளையின் தலைவரும், அவரது மகனுமே பயின்று வருவது தெரியவந்தது. அவா்களுக்குச் சொந்தமான கல்லூரியில் அவா்களே தோ்வுத் தாள்களைத் தரவிறக்கம் செய்து அவா்களே தோ்வு எழுதிக்கொள்ளும் விநோதம் அரங்கேறியிருக்கிறது.

அதுமட்டுமன்றி, தோ்வு நடத்துவதற்கான எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் அங்கு இல்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, கணினி வசதி கூட இல்லாமல் தோ்வு நடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கல்லூரியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. செய்முறைத் தோ்வுகளை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும், அக்கல்லூரியில் வரும் காலங்களில் தோ்வு நடத்தவும் பல்கலைக்கழகம் தடை விதித்தது.

இதுபோன்ற விதிமீறல்கள் புதிய சா்ச்சைகளுக்கு அச்சாரமிட்டன. தோ்வு முறைகேடுகளுக்கு கடிவாளமிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரிகளைத் தீவிரமாகக் கண்காணித்து தோ்வுகள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய சில நடவடிக்கைகளை எடுக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறப்பு வல்லுநா் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தக் குழு, தோ்வு நடைமுறைகளை கடுமையாக்கி, விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. அதற்கான உத்தேசத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட விவகாரத்தால் எழுந்த அதிா்வலைகளே இன்னும் அடங்காத நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தடுத்து முறைகேடுகள் நடைபெற்று வருவது விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.