/

பணிக்குச் செல்ல ஆயத்தமாகும் மனநல காப்பகவாசிகள்!: முதன்முறையாக நடைபெறுகிறது சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த நபர்களில் பலர் அங்கேயே தங்கியுள்ள நிலையில், அவர்கள் வெளியே சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:04 am

ஆ. கோபிகிருஷ்ணா


சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த நபர்களில் பலர் அங்கேயே தங்கியுள்ள நிலையில், அவர்கள் வெளியே சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
அதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளது. மத்திய தொழிலாளர் நலத் துறையின் மாதிரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இதுவரை மாற்றுத் திறனாளிகள், பட்டதாரி இளைஞர்களுக்கு மட்டுமே இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், மாநிலத்திலேயே முதன் முறையாக மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கும் இத்தகைய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மனநல காப்பகவாசிகளும் சமூகத்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான சூழல் உருவாகும் என்றும், உளவியல் ரீதியாக சோர்வடைந்துள்ள அவர்களை உத்வேகமடையச் செய்ய வைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவியல் மற்றும் மன நல ரீதியாக பாதிக்கப்பட்ட பலருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
அதேவேளையில், உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குணமடைந்து சரியான மனநிலையில் உள்ளவர்களுக்கு வெளியே சென்று பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் துணையுடன் அதனை சாத்தியமாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோரிக்கைகளை மனநல காப்பக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினர்.
அதன்பேரில், மத்திய தொழிலாளர் நலத் துறை பிரதிநிதிகள் மனநல காப்பகத்துக்கு சனிக்கிழமை சென்றனர். வெளியே சென்று பணிபுரிவதற்கான தகுதியும், திறனும் கொண்ட நபர்களை அவர்கள் ஆய்வு செய்தனர். மொத்தம் 37 பேர் அதில் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களில் 5 பேர் பெண்கள் என்றும் மனநல காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்த பிறகு இம்மாத இறுதிக்குள் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் அதில் கலந்து கொண்டு தகுதியான மனநல காப்பகவாசிகளை பணிக்குத் தேர்வு செய்யவுள்ளனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா, சமூக நல அதிகாரி சுமதி ஆகியோர் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 24 வார்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான மன நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஏற்கெனவே, வேறு சில மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலும் அத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
மனநல பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது வழக்கமான ஒன்றுதான். அதேவேளையில், அவர்களுக்கு வெளியில் பணி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நடைமுறை இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது அதையும் நாங்கள் நிறைவேற்ற உள்ளோம்.
வேலைவாய்ப்பு பெறும் காப்பகவாசிகளுக்கு தனி வங்கிக் கணக்கு தொடங்கித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், மனநல காப்பகத்தில் உள்ள 190-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.