ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இயக்குநரகத்திற்காக குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்கு என்.சி.சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல் நிகழாண்டில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் இருந்து புதுதில்லியில் நடைபெற இருக்கிற குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், செந்திக்குமார நாடார் கல்லூரியின் மாணவர் மா.அருண்ராஜாவும் ஒருவராவர். இந்தச் சாதனைக்காக மாணவர் விருதுநகர், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், காஞ்சிபுரம், சென்னை உள்ளி்ட்ட பல்வேறு இடங்களில் நடந்த 12 முறை நடந்த 10 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இம்முகாமில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக தேர்வு எழுதும் வாய்ப்பினையும் விடுத்து, கடுமையான பயிற்சியினால் 65-வது குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் விருதுநகருக்கும், தான் படித்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.