/

நில அதிர்வு அச்சத்தில் மக்கள்: முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் வெடிவைத்து தகர்க்கப்படும் பாறைகள்!

உதகை : முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் மின்வாரியத்தின் உயர் மின் அழுத்த கோபுரங்களுக்காக ஆழ்துளை குழாய்கள் அமைத்து பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, இப்பகுதியின் சுற்றுச்சூழல் வெகுவ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:06 pm

ஏ. பேட்ரிக்

உதகை : முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் மின்வாரியத்தின் உயர் மின் அழுத்த கோபுரங்களுக்காக ஆழ்துளை குழாய்கள் அமைத்து பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, இப்பகுதியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், இச்செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகப் பகுதி "கோர் úஸôன்' எனப்படும் முக்கியப் பகுதியாகவும், "பபர் úஸôன்' எனப்படும்

 வெளிப்புறப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கோர் úஸôன் பகுதியில் மனித நடமாட்டமே இருக்கக்கூடாது எனவும், இப்பகுதியில் வணிக ரீதியிலான

 எத்தகைய வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதன் காரணமாகவே இப்பகுதியில் தனியார் வாகனங்கள் செல்லவும், கால்நடைகளை வளர்க்கவும், அங்குள்ள விவசாய நிலங்கள் பயன்படுத்திவரும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், இவை எதையுமே கண்டு கொள்ளாமல் சிங்காரா மின் நிலையத்திலிருந்து மாயார் காப்புக்காடு மற்றும் சத்தியமங்கலம் வழியாக ஈரோடு வரை செல்லும் உயர் அழுத்த மின்சார கோபுரங்களை தற்போதுள்ள இடத்திலிருந்து மாற்றி புதிய இடத்தில் அமைப்பதற்காக 118 உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்க முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

 இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காராவிலிருந்து ஈரோடு

 வரையிலான காப்புக்காட்டுப் பகுதியில் 118 உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 இதற்காக இக்கோபுரங்களின் நான்கு புறங்களையும் தாங்கி நிற்கும் வகையில் 15 அடி ஆழத்திலும், 10 அடி உயரத்திலும் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு அடியில் பாறைகள் நிறைந்துள்ளதால் அந்தப்

 பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக ஒவ்வொரு குழியிலும் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை குழிகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் வெடிமருந்து நிரப்பப்பட்டு அந்த பாறைகள் தகர்க்கப்படவுள்ளன.

 இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

 மசினகுடி உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் உட்புறப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் மனித நடமாட்டமும், கால்நடை மேய்ச்சலும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு சிறிய அளவிலான தடுப்பணைகளை அமைக்கவும், ஆழ்துளை குழாய் கிணறுகளை அமைக்கவும் அனுமதி மறுத்து வருகிறது வனத்துறை. ஆனால், சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட மிக முக்கிய வனப்பகுதிகள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்க பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதால் ஏற்படும் நில அதிர்வையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் கண்காணிக்காதது ஏன் எனவும் வினா எழுப்பியுள்ளனர்.

 முதுமலை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் தெப்பக்காடு மற்றும் கார்குடி ஆகிய 2 பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதிக்குள் இரவு நேரங்களில் வாகன இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக, கர்நாடக மாநில எல்லைப் பகுதிக்குள் சிக்கிக் கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இவ்விரண்டு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்க பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.

 ஆனால் இந்த கோபுரங்களால் பறவைக்கு பெரும் ஆபத்து ஏற்படுமெனக்கூறி அனுமதி மறுத்துள்ளது வனத்துறை. ஆனால், மாயார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்காக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதாலும், அதற்காக ஆழ்துளை இடுவதாலும் ஏற்படும் அதிர்வுகள் தினமும் தொடர்ந்து பல கி.மீ. தூரத்திற்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 நீலகிரி மாவட்டத்தில் பாறைகளை உடைக்கக்கூடாது எனவும், அரசுப் பணிகளிலும் பாறைகளை உடைத்து அந்த கற்களை கட்டுமானத்துக்காக பயன்படுத்தக்கூடாது

 எனவும் உத்தரவிட்டுள்ள சூழலில், பாதுகாக்கப்பட வேண்டிய காப்புக்காட்டிற்குள் தோண்டப்பட்டுள்ள இந்த குழிகளுக்குள் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதற்காக நிரப்பப்படும் வெடி மருந்துகளும் அவை வெடித்து சிதறும்போது ஏற்படும் அதிர்வுகளும் அப்பகுதியிலுள்ள நிலங்களுக்கு பெரும் ஆபத்தையே ஏற்படுத்தும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வாழைத் தோட்டம் பகுதி பொறுப்பாளர் நரசிம்மன்.

 முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளுக்குள் வசித்து வரும் பொதுமக்களுக்கு தினந்தோறும் பல்வேறு பிரச்னைகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவருகிறது. இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள மசினகுடி, மாயார், பொக்காபுரம், சோலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறு நடந்திருந்தால் நடவடிக்கை-அதிகாரி

முதுமலையில் மின்வாரியத்தின் பணிகள் தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா தெரிவிக்கும் கருத்து:

 முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் மின்வாரிய மேம்பாட்டு பணிகளுக்காக அரசின் சார்பில் மேல்மட்டத்தில் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக வெட்டப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக கிடைத்துள்ள தகவல் புதியதாகும். இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு தவறு நடைபெற்றிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதே முக்கிய நோக்கமாகும். இவை இரண்டிற்கும் இடையூறாக அமையும் அனைத்து நடவடிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.