/

ஒலிம்பிக் மாரத்தான்: பதக்கம் வெல்ல தயாராகும் ராம்சிங் யாதவ்

உதகை, ஜூலை 14: லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் தங்கம் வெல்வதற்காக இந்திய வீரர் ராம்சிங் யாதவ் உதகையில் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சிக் காலத்தில் ஊடகங்களுடன் பேசக் கூடாத

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:06 pm

ஏ. பேட்ரிக்

உதகை, ஜூலை 14: லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் தங்கம் வெல்வதற்காக இந்திய வீரர் ராம்சிங் யாதவ் உதகையில் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பயிற்சிக் காலத்தில் ஊடகங்களுடன் பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ராம்சிங் யாதவிற்கு பதிலாக அவரது பயற்சியாளரான மேத்யூஸ் "தினமணி' நிருபரிடம் கூறியது:

ராணுவத்தில் ஜபல்பூரிலுள்ள தொலைத்தொடர்பு பிரிவில் சுபேதார் மேஜராகப் பணியாற்றுகிறேன். மாரத்தான் பந்தய தூரம் 42 கி.மீ. 195 மீட்டர். ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் 1978-ம் ஆண்டில் சிவநாத் சிங் பங்கேற்ற பிறகு, இந்தியா இப்பிரிவில் பங்கேற்கத் தகுதி பெறவேயில்லை. அப்போது அவர் குறிப்பிடட தூரத்தை 2 மணி நேரம் 12 நிமிடங்களில் கடந்தார். இதுவே இன்றளவும் தேசிய அளவில் சாதனை.

34 ஆண்டுகளுக்குப்பின்: இப்போது ராம்சிங் யாதவ், இத்தூரத்துக்கான தகுதி நேரமான 2 மணி 18 நிமிடத்தில், 2 மணி 16 நிமிடம் 50 வினாடிகளிலேயே கடந்து தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி மாரத்தான் பிரிவிலும் பங்கேற்கிறது. ராம்சிங் யாதவ் இந்தியாவின் மிகச் சிறந்த மாரத்தான் வீரர். ராணுவத்தில் ஹைதராபாத்திலுள்ள ஆர்டிலரி படைப்பிரிவில் பணியாற்றுகிறார்.

இவர் கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மாரத்தான் பிரிவில் பங்கேற்க முயன்றபோது தகுதி நேரமான 2 மணி 18 நிமிடம் 20 வினாடிகளுக்கு பதிலாக 2 மணி நேரம் 18 நிமிடம் 23 வினாடிகளை எடுத்துக் கொண்டதால் அவரால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை. இந் நிலையில் 4 ஆண்டுகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது  சுலபமாக தகுதி பெற்றுவிட்டார்.

 இவர் 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மும்பை மாரத்தான் போட்டிகளிலும், 2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2010ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளிலும், 2011-ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு ஸ்டாண்ட்ர்டு ஆண்டு சார்ட்டர்டு உலக மாரத்தான் போட்டியில் சிங்கப்பூரில் ஓடி உலக அளவில் இந்திய அணியை 3-வது இடத்துக்கு தகுதி பெற வைத்தார்.

சிறப்பிடம் பெறுவார்: தற்போது எடுத்துவரும் கடுமையான பயிற்சிகளின் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் அவர் சிறப்பிடம் பெறுவார் என்பது உறுதி. உதகையின் தட்பவெப்பமும், லண்டனின் தட்ப வெப்பமும ஒரே மாதிரியாக இருந்தாலும், உதகை மலைப்பகுதியாக உள்ளது. ஆனால் லண்டன் சமவெளிப் பகுதியாக இருப்பதால், உதகையில் அவரது நேரத்தைவிட லண்டனில் மிகக்குறைந்த நேரத்திலேயே அவரால் தூரத்தைக் கடக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 ராம்சிங் யாதவ் பேசும்போது "தான் மெட்ரிக் வரை மட்டுமே படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்து விளையாட்டு வீரராக இருப்பதாகவும், அறிவு கல்வியால் மட்டுமே கிடைப்பதில்லை. மாறாக அனுபவத்தினால்தான் கிடைக்கிறது. தனக்கு கிடைத்துள்ள அனுபவங்களால் லண்டனில் தன்னால் திறம்பட செயலாற்ற முடியும்.

தனது வெற்றி தனக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெருமை சேர்க்கும்' என்றார்.  லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தானில் பங்கேற்கும் ராணுவ வீரர் ராம்சிங் யாதவுடன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரைச் சேர்ந்த இர்பான் 20 கி.மீ.தூர நடைப் போட்டி பிரிவிலும், கூர்கா ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த பசந்த் பகதூர் ராணா 50 கி.மீ. தூர நடைப்போட்டி பிரிவிலும் பங்கேற்பதாகவும் பயிற்சியாளர் மேத்யூஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.