விருதுநகர் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பில் குற்றச் சம்பவங்களை விரைந்து சென்று தடுக்கும் வகையில் ஈகிள் துரிதப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட காவல் துறையின் சார்பில் ஈகிள் துரிதப்படையின் தொடக்கவிழா சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில், நகரங்களில் நடக்கும் வழிப்பறி சம்பவங்கள், பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் ஈகிள் துரிதப்படையினர் பேருதவியாக இருப்பார்கள்.
அதேபோல், தகவல் கிடைத்தவுடன் சம்பவம் நடந்த இடங்களுக்கு உடனடியாக சென்று நடவடிக்கையில் ஈடுபடுவர். இதில் 4 சக்கர வாகனம் செல்ல முடியாத வழித்தடத்தில் எளிதாக செல்லும் வகையில் அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் இருசக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சம் ஆகும். குறி்ப்பாக காவல் துறையினரின் பணிகளை மிகவும் விரைவாக செய்ய வேண்டும் என்பதற்காகவே ஈகிள் துரிதப்படை என்ற பேரில் ரோந்துப்படை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில், இம்மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சழி, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 7 காவல் துறை உள்கோட்டங்களுக்கும் ஈகிள் துரிதப்படையின் சார்பில் 48 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு வாகனத்திற்கும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் காவலர்கள் 2 பேர் வீதம் ஈகிள் துரிதப்படை இருசக்கர வாகனத்திற்கு ஒதுக்கப்படவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் குற்றச் சம்பவங்களை தடுக்க உதவும் வகையில் உடனடியாக 8526682866 என்ற செல்லிட பேசிக்கும் அல்லது வாட் அப்பிலோ தகவலை அனுப்பலாம். அதேபோல், ஏற்கனவே உள்ள 100 மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு அலுவலக எண்:04562-266255 என்ற தொலைபேசியிலும் தொடர்பு தெரிவிக்கலாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை கண்காணிப்பாளர்கள் சக்கரவர்த்தி(விருதுநகர்), வெள்ளைத்துரை(சிவகாசி), தனசேகர்(அருப்புக்கோட்டை), ராஜா(ராஜபாளையம்), குமார்(சாத்தூர்), முரளிதரன்(ஸ்ரீவில்லிபுத்தூர்), சிவகுமார்(சிவகுமார்), ஆயுதப்படை (பொறுப்பாளர்) ராதாகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.