தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவே மக்களவைக்குச் செல்ல விரும்புகிறேன்: வைகோ
எத்தனையோ போராட்டங்கள், தேர்தலில் வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக மக்களவைக்குச் செல்ல விரும்புகிறேன் என


எத்தனையோ போராட்டங்கள், தேர்தலில் வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக மக்களவைக்குச் செல்ல விரும்புகிறேன் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவி்ததார்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் பா.ஜ.க, மதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில், மதிமுகவின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தேர்தல் அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போராட்டங்கள் நிறைந்த என் வாழ்வில், இந்த நாள் மனிதில் பதிகிற நாளாகும். அண்ணா அன்று என்ன சொன்னாரோ அக்கொள்கைகளை பின்பற்றி நடந்து வருகிறேன். அப்போது பொதுக்குழு உறுப்பினர்களாக கலைஞர், திருப்பூர் துரைசாமி ஆகியோர் இருந்தனர். வயதில் மூத்தவரை இளைஞனாக தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறேன். தற்போது, என்னை தலைவர் என்று உச்சரிப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியினர் 320 இடங்களில் வெற்றி பெறுவார்கள். நரேந்திரமோடி தலைமையில் நெருக்கடி கொடுக்க முடியாத நிலையில் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் அரசாக அமையும். இம்முறை காங்கிரஸ் கைப்பற்றுவது 99-இடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.
இக்கூட்டணியில் மதிமுகவிற்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை பார்க்கிறார்கள். என்னிடம் பணம் கிடையாது, மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் விசுவாசமுள்ள தலைவராக இருப்பேன் என்று உறுதி கூறமுடியும். சீட்டு ஒதுக்கீடு செய்யும் போதே பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் 40 தொகுதியிலும் மதிமுக போட்டியிடுவதாகவே எண்ணியே கட்சியின் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றார். அதேபோல், கூட்டணி நிர்வாகிகள் தெருத்தெருவாக இறங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இந்த மக்களவை தொகுதியில் வருகிற 2-ம் தேதி கேப்டன் விஜயகாந்த் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அப்போது அவரது வாகனத்தில் நான் வருவேன்.
பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு தூக்கு வழக்கில் இருந்து காப்பாற்றிய வழக்குரைஞர் ராம்ஜெத்மாலனி, பெரியார்தாசன் உள்ளிட்ட அறிவுஜீவிகள் பலர் வந்து கலந்து கொள்ளும் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடைபெறுகிறது. மனிதன் வாழ்வில் ஒருமுறை தான் பிறக்கிறோம், அதற்குள் எவ்வளவு நல்லது செய்யலாம். இதுவரையில் தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டப்பேரவை, மக்களவை, தெருக்களிலும் மற்றும் சாலையோரங்களிலும் வெளியிலிருந்து போராடியுள்ளேன். தற்போது, மக்களவையில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக மக்களவை உறுப்பினராக செல்ல விரும்புகிறேன். இத்தொகுதி பொதுமக்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என நம்புவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இதில், தேமுதிக மாவட்ட செயலாளர் வைரமுனி, பா.ம.க ஜெயபால், பா.ஜ.க நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...