ஊரக மக்கள் வாழ்வாதர இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஊரக மக்கள் வாழ்வாதர திட்ட அலுவலர் பி்ச்சை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மக்கள் வாழ்வாதர இயக்க திட்டம் சார்பில் ராஜபாளையம், சிவகாசி, காரியாபட்டி, விருதுநகர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 184 ஊராட்சிகளில் 789 குக்கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் மேலும் அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் தொடங்கப்பட்டு, முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கிராமங்களில் ஏழை மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது இத்திட்டத்தின் சார்பில் கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு உத்தரவி்ட்டுள்ளது. அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கு கார்மென்ட்ஸ், வரவேற்பாளர், கனிப்பொறி ஆபரேட்டர், ஜே.சி.பி.ஆபரேட்டர், வாகன ஓட்டுநர், வாகனங்கள் பழுதுநீக்குதல், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதல், குளிர்சாதனம் மற்றும் மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல், தையல், உணவு பதப்படுத்துதல், மேன்சன் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில், ஒவ்வொரு பயிற்சியின் தன்மைக்கேற்ப 2 மாதம் முதல் 4 மாதங்கள் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு அங்கிகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதற்கான இளைஞர்களை ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோரால் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.