விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை அடுத்த முத்துச்சாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.சரவணன்(38). இவர் சேலத்தில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்தக் கிராமம் அருகே கன்னிசேரி, சிவகாசி, முதலிபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஈமு கோழிப் பண்ணை வைத்து தருவதாக அணுகியுள்ளார். அதற்கு மாத வருமானம் தருவதாகக் கூறியும், முதல் பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் வழங்கி விடுவதாகவும் கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் முதலீடு செய்துள்ளனர். இதேபோல், இப்பகுதியில் 129 பேரிடம் ரூ.2.50 கோடி வரையில் வசூல் செய்துள்ளார். அதோடு, ஒவ்வொருவரும் 10 முதல் 20 ஈமு கோழிகளை வளர்க்கும் படி வழங்கியுள்ளார். மேலும், இக்கோழிகளை பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையில் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாகவும் கூறி குறிப்பிட்ட மாதங்களுக்கு வழங்கினாராம். அதேபோல், சிலருக்கு வழங்கிய காசோலைகளை வங்கிகளில் வசூலுக்கு கொடுத்தால் பணம் இல்லையென்று திரும்பி வந்துள்ளது.