/

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட உரிய நடவடிக்கை: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட, தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொள்ளும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:51 pm

ஜெபலின்ஜான்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட, தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொள்ளும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.

 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

 மத்திய அரசும், கர்நாடக அரசும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து தவறான அணுகுமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

 இதையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா பொருள்படுத்தாமல் அனைத்து தடைகளையும் தகர்த்தெறியும் விதமாக காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழகத்திற்கு  தண்ணீர் பெறும் உரிமையை  வாதாடி பெற்றுள்ளார்.

 காவிரி கண்காணிப்புக்குழுவும் கூடி தமிழகத்திற்கு உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதைப் போல உச்சநீதி மன்றமும் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்து வருகிறார். அதையும் விரைவில் நிறைவேற்ற முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

 தற்போது உள்ள சூழ்நிலையில் மேட்டூர் அணையின் நீர்இருப்பு குறைவாக இருந்தாலும் மக்களின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நெற்பயிரை பாதுகாக்கவும்  முதல்வர் ஜெயலலிதா, அணையில் இருந்து 10,000 கனஅடி நீரை திறந்து விட ஆணையிட்டுள்ளார்.

 மேலும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு சுமார் ரூ.90 கோடி உடனடியாக நிதியினை ஒதுக்கி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல், அப்பகுதிக்கு மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழுநேர மின்சார வசதிகள் என பல்வேறு உதவிகளையும் அறிவித்துள்ளார்கள்.

 விவசாயிகள் தங்கள் பயிருக்கு செலுத்தக்கூடிய காப்பீட்டு தொகையினை முழுமையாக அரசே செலுத்தும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி தமிழகத்தில் உரிமைக்காகவும், தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவும் அதிமுக அரசு திகழ்ந்து வருகிறது என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.