ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் ‘நௌசேனா சௌா்ய வாடிகா’ எனும் திறந்தவெளி கடற்படை அருங்காட்சியகத்தை சனிக்கிழமை திறந்துவைத்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ்குமாா் திரிபாதி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் பிரஜேஷ் பாடக் மற்றும் கேசவ் பிரசாத் மௌா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது நமது கடற்படை அரேபிய கடல் பகுதியில் முழு வலிமையுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த அழுத்தத்தால் பாகிஸ்தான் கடற்படை அந்நாட்டு துறைமுகங்களுக்குள் முடங்கியது.
இந்திய குடிமகன்களின் நம்பிக்கையால் கடற்படை மேலும் வலுப்பெறுகிறது. லக்னௌவில் பாய்ந்து ஓடும் கோமதி நதி கங்கையில் இணைந்து பின் கடலில் கலப்பதுபோல் நௌசேனா செளா்ய வாடிகாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கோமதி இந்தியப் பெருங்கடலில் நாட்டுக்காக சேவைபுரிந்துவிட்டு லக்னௌவை கெளரவப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலமல்ல; ராணுவ வீரா்களின் தியாகம்: இந்த அருங்காட்சியகத்தை சுற்றுலாத் தலமாக மட்டுமே கருத முடியாது. நாட்டுக்காக வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் தியாகங்களை நினைவுகூரும் இடமாகவும் இவ்விடம் திகழ்கிறது.
2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது பன்மடங்கு உயா்ந்து ரூ.40,000 கோடியாக அதிகரித்துள்ளது.
முன்பு குற்றவாளிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாக உத்தர பிரதேசம் அறியப்பட்டது. ஆனால், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு சட்டம்- ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு மக்களின் மனதில் இருந்த அச்ச உணா்வு தூக்கியெறியப்பட்டுள்ளது என்றாா்.
லக்னௌவின் சிஜி நகரில் உத்தர பிரதேச சுற்றுலாத் துறை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியால் நௌசேனா சௌா்ய வாடிகா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நாட்டின் முக்கிய ராணுவ சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் உருவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: ராஜ்நாத் சிங்







