மேற்கு ஆசியப் போர் காரணமாக தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, தங்கம் வாங்காமல் இருந்ததற்காக பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 28) நன்றி தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி கையிருப்பை தற்காத்துக்கொள்ளும் வகையில் வெளிநாடுகள் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட பொருள்களை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
தனது கோரிக்கையை ஏற்று, மக்கள் தங்கம் வாங்காமல் இருந்தது, தேசத்தின் மீதான மக்களின் பொறுப்புணர்வை பிரதிபலிப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
135வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார். அப்போது மேற்கு ஆசியப் போரின்போது தான் விடுத்த கோரிக்கைக்கு மக்கள் அளித்த ஆதரவு குறித்து பாராட்டிப் பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
''மேற்கு ஆசியப் போர் காரணமாக நாட்டு மக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட பொருள்களை ஓராண்டிற்கு வாங்க வேண்டாம் எனக் கூறியிருந்தேன்.
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து உள்நாட்டு சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
தனி வாகனத்தை தவிர்த்து, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்; சமையல் எண்ணெய்யை குறைத்துக்கொள்ளவும், இயற்கை விவசாயம் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தேன்.
நாட்டு மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி, அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
சிலர் தங்கள் திருமண நிகழ்வுக்குக் கூட தங்கம் வாங்காமல் இருந்துள்ளனர். தேவை ஏற்படும்போது, சிலர் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கியுள்ளனர். என் கோரிக்கையை தங்கள் வாழ்நாளின் அன்றாட பழக்கமாக கடைப்பிடித்துள்ளனர்.
பல குடும்பங்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். பலர் கார்பூலிங் (வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் நபர்கள் ஒரே காரில் ஒன்றாகப் பகிர்ந்து பயணிப்பது) செய்து தனி வாகனப் பயன்பாட்டைக் குறைத்துள்ளனர்.
பலர் தனது தனி வாகனத்தில் ஒரே திசையில் செல்லும் வேறு ஒருவரை ஏற்றிச்செல்வதை வழக்கமாக்கியுள்ளனர்.
தங்கள் வெளிநாட்டுப்பயணங்களை ஒத்திவைத்தது குறித்து பலர் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மக்களின் ஒத்துழைப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தேசத்தின் மீதான மக்களின் பொறுப்புணர்வை இது பிரதிபலிக்கிறது'' என பிரதமர் மோடி பேசினார்.
Summary
West Asia crisis PM Narend Modi Thanks Citizens For Supporting NO GOLD Call
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைக்கிறது! செஷல்ஸ் அவையில் மோடி உரை!

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்









